கார் மோதி லோடு மேன் இறந்த வழக்கில் தனியார் நிறுவன பொறியாளருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை..!!

சென்னை: கார் மோதி லோடு மேன் இறந்த வழக்கில் தனியார் நிறுவன பொறியாளருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்னை, பல்லாவரம், ஈஸ்வரி நகர், எண்.57 என்ற முகவரியில் வசித்து வரும் இருதயநாதன் வயது 48 என்பவர் டாடா ஏஸ் வாகனம் ஓட்டி வருகிறார். கடந்த 31.12.2018 அன்று இருதயநாதன் ஆட்டோவில் லோடுமேன் பாஸ்கர் வயது 51, சென்னை மற்றும் மோகன் ஆகிய இருவரை ஏற்றிக்கொண்டு ராஜீவ்காந்தி சாலையில் கிண்டி நோக்கி சென்று கொண்டிருந்த போது, CPT பாலிடெக்னிலிருந்து அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் வந்த கார் மேற்படி டாடா ஏஸ் வாகனத்தின் பின்புறம் இடித்ததில் டாடா ஏஸ் வாகனம் நிலைதடுமாறி மரத்தில் மோதி தலைகுப்புற கவிழ்ந்ததில் படுகாயமடைந்த லோடுமேன் பாஸ்கர் சம்பவயிடத்திலேயே இறந்து விட்டார்.

இது குறித்து அடையார் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் IPC மற்றும் மோட்டார் வாகன சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்ததில், கார் ஓட்டுநர் ஶ்ரீகாந்த் பாரி வயது 24, த/பெ.வெங்கடேஷ்பாரி, 4வது தெரு, தரமணி, சென்னை என்பவர் குடிபோதையில் காரை இயக்கி விபத்து ஏற்படுத்தியது தெரியவந்ததின் பேரில் ஶ்ரீகாந்த் பாரியை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஶ்ரீகாந்த பாரி தனியார் நிறுவனத்தில் பொறியாளராக வேலை செய்து வருவது தெரியவந்தது. இவ்வழக்கு, போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினரால் முறையாக விசாரிக்கப்பட்டு,

இறுதி அறிக்கை தயார் செய்து, உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள 1வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக சாட்சிகள் ஆஜர்படுத்தப்பட்டும், தடயங்கள் சேகரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டு இறுதி தீர்ப்பு 05.02.2025 அன்று வழங்கப்பட்டது. மேற்படி வழக்கில் எதிரி ஶ்ரீகாந்த் பாரி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், மேற்படி குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றம் ரூ.15,000/- அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்கள், மேற்படி வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த அடையார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற அலுவல் பணிபுரியும் காவல் ஆளிநர்களை, காவல் உயர் அதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர்.

The post கார் மோதி லோடு மேன் இறந்த வழக்கில் தனியார் நிறுவன பொறியாளருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை..!! appeared first on Dinakaran.

Related Stories: