சென்னை: சென்னையில் கடந்த டிசம்பர் மாதம் நீரால் பரவும் நோய் அதிகரித்துள்ளதாக பொது சுகாதாரத்துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மனிதர்கள் வாழ சுகாதாரமான நீரும், உணவும் அவசியம். இவை இரண்டும் மாசுபாட்டால் உடல்நலக் குறைபாடுகள் ஏற்படும். இந்நிலையில் தமிழகத்தில் நீர் மூலம் பரவும் நோய் கடந்த டிசம்பர் மாதம் அதிகரித்து உள்ளதாக பொது சுகாதார இயக்குநரகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு டிசம்பர் மாதத்தில் பெய்த தொடர் மழையும் பெஞ்சல் புயலும் காரணமாக இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பொது சுகாதாரத்துறை படி, சென்னையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரை மொத்தம் 18 காலரா பாதிப்பு பதிவாகி உள்ளது. ஆனால் டிசம்பர் மாதத்தில் மட்டும் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் தமிழ்நாட்டில் மொத்த 70 பேர் காலராவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் 35 பேர் சென்னையை சேர்ந்தவர்களாக இருந்துள்ளனர். காலரா மட்டுமின்றி, ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரை மாதங்களுக்கு இடையில் சராசரியாக 250 ஆக இருந்த கடுமையான வயிற்றுப்போக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் டிசம்பரில் மட்டும் 526 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், தமிழ்நாடு முழுவதும் 5,591 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல சென்னையில் 379 பேரும், தமிழகத்தில் 2,729 பேரும் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக தனியார் நோய் ஆய்வாளர் கூறியதாவது: கழிவுப்பொருள் மற்றும் காலராவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் உள்ளிட்ட அசுத்தமான நீர் ஆதாரங்கள் தண்ணீரால் பரவும் நோய்களின் அதிகரிப்புக்கு வழிவகுக்கும். வெள்ளம் ஏற்படும் போது அல்லது தண்ணீர் தேங்கி நிற்கும் போது இது நிகழலாம். எனவே சுத்தமான சூடு தண்ணீரை குடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
The post சென்னையில் கடந்த டிசம்பர் மாதம் நீரால் பரவும் நோய் அதிகரிப்பு: பொது சுகாதாரத்துறை தகவல் appeared first on Dinakaran.