போளூர், பிப். 5: போளூரில் பறிமுதல் செய்யப்பட்ட 9,275 லிட்டர் எரிசாராயத்தை போலீசார் ஏரியில் கொட்டி தீயிட்டு கொளுத்தி அழித்தனர். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் மதுவிலக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 2023ம் ஆண்டு சுமார் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 265 கேன்கலில் 9 ஆயிரத்து 275 லிட்டர் எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்து, வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் நேற்று சுமார் ₹25 லட்சம் மதிப்புள்ள எரிசாராயத்தை கலால் தாசில்தார் வெங்கடேசன், போளூர் கலால் காவல் நிலைய ஆய்வாளர் பழனி, உதவி ஆய்வாளர் கோவிந்தசாமி, தலைமை காவலர் கார்த்திகேயன் ஆகியோர் கொண்ட குழுவினர் ஏந்தல் ஏரியில் பெரியபள்ளம் எடுத்து எரி சாராயத்தை கொட்டி தீ வைத்து எரித்தனர். சாராயத்திற்கு பயன்படுத்தப்பட்ட 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட காலி கேன்களையும் தீயிட்டு கொளுத்தி அழித்தனர்.
The post 9,275 லிட்டர் எரிசாராயம் தீயிட்டு கொளுத்தி அழிப்பு ஏரியில் கொட்டி போலீஸ் அதிரடி போளூரில் பறிமுதல் செய்யப்பட்ட appeared first on Dinakaran.