செங்கம், ஜன. 26: செங்கம் அடுத்த கட்டமடுவு ராஜாபாளையம் பகுதியை சேர்ந்தவர் வேலன். இவரது மகன் சிபிராஜ். அதேபகுதியை சேர்ந்தவர்கள் ஏழுமலை, சூரியா. இவர்கள் மூன்று பேரும் கூலிதொழிலாளிகள். பயிரை சேதப்படுத்தும் வன விலங்குகளுக்கு நாட்டு வெடி குண்டுகளை தயார் செய்து விவசாய நிலத்தில் வைப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று ராஜாபாளையம் வனப்பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு சூரியா, சிபிராஜ், ஏழுமலை ஆகிய 3 பேரும் நாட்டு வெடிகுண்டு வைக்க சென்றனர். அப்போது திடீரென வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இவர்களின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர், இவர்களை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மேல் செங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து தகவல்களை சேகரித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வன விலங்குகளை வேட்டையாட வைத்த நாட்டு வெடிகுண்டு வெடித்து 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post விவசாய நிலத்தில் வனவிலங்குகளுக்கு வைத்தபோது நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறியது: 3 பேர் படுகாயம் appeared first on Dinakaran.