- யூஜிசி
- திமுக
- தில்லி
- முதல்வர் எம் கே ஸ்டாலின்
- சென்னை
- ஜனாதிபதி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- எம்.கே. ஸ்டாலின்
- மொழிப் போர் தியாகிகள் நாள்
- பல்லாவரம்…
- தின மலர்
சென்னை: யுஜிசி வரைவு நெறிமுறைகளுக்கு எதிராக மாணவரணி சார்பில் தலைநகர் டெல்லியில் மாபெரும் போராட்டம் நடைபெறும் என்று திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறினார். பல்லாவரத்தில் நடைபெற்ற மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாட்டை இருமொழிக் கொள்கை கொண்ட மாநிலமாகப் பாதுகாத்தோம். அதற்கு சிக்கலை உருவாக்கத்தான், மும்மொழித் திட்டத்தை கொண்டு வர பார்க்கிறார்கள்.
தேசிய கல்விக் கொள்கையை கொண்டு வருவதே இந்தியையும், சமஸ்கிருதத்தையும் நமது மீது திணிக்க வேண்டும் என்றுதான். தொல்சமூகமான தமிழ்ச்சமூகம் மேல், ஆரிய மொழியை நேரடியாகத் திணிக்க முடியவில்லை என்று பள்ளிகள் மூலமாக பல்கலைக் கழகங்கள் மூலமாகத் திணிக்க நினைக்கிறார்கள். மொழிப்போர் இன்னும் முடியவில்லை இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
ஒன்றிய அரசுப் பணிகளுக்கு இந்தி தெரிய வேண்டும் என்று சொல்வது, பொதிகை தொலைக்காட்சி நிலையத்தில் இந்தி மாதம் கொண்டாடுவது அங்கு, தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிட நல்திருநாடும் என்ற சொல்லைத் தவிர்த்துவிட்டுப் பாடுவது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுப்பும் கடிதங்களுக்கு இந்தியில் பதில் அனுப்புவது, அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு அறிக்கையில் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்.-இல் பயிற்று மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று பரிந்துரைப்பது என்று மொழிப்போர் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
அன்றைக்கு மாணவர்களும், இளைஞர்களும் இணைந்து தமிழைக் காத்தார்கள் இன்றைக்கு அந்த மொழிப்போர்த் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் இந்த மேடையில் இருந்து ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன். இன்றைக்கு நம்முடைய பல்கலைக் கழங்களை மாநில அரசுகளிடம் இருந்து பறிக்கும் ஆபத்தை முறியடிக்க, மாணவரணி சார்பில் தலைநகர் டெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து, மாபெரும் போராட்டம் நடைபெறும்.
அன்றைக்கு, மொழிப்போரில் ஈடுபட்டு, இந்தி பேசாத மாநிலங்களின் மொழிகளை எல்லாம் காப்பாற்றினோம். இன்றைக்கு, கல்வி உரிமைப் போரில் ஈடுபட்டு, இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலங்களின் கல்வி உரிமையையும் காக்க கழக மாணவரணியினர் முன்கள வீரர்களாக டெல்லியில் திரளுவார்கள், கல்வி உரிமையையும் – மாநில உரிமைகளையும் காப்போம். வரும் 2026ம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தல், கொள்கை வாதிகளாக இருக்கும் நமக்கும் கொத்தடிமைக் கூட்டமாக இருக்கும் அ.தி.மு.க.விற்கும் நடக்கும் தேர்தல்.
மறந்துவிடாதீர்கள் தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் முன்னேற்றிய திமுகவிற்கும் தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் அடமானம் வைத்த அதிமுகவிற்கும் நடக்கும் தேர்தல். 2019 முதல் நடந்த அனைத்து தேர்தலிலும் தொடர்ச்சியாக வென்றிருக்கிறோம். தலைவர் கலைஞர் நம்மை விட்டுப் பிரிந்த பின் நாம் சந்தித்த எல்லாத் தேர்களிலும் வென்று நாம் கலைஞருக்குப் புகழ் சேர்த்துக் கொண்டிருக்கிறோம். இது தொடரும், நான் உறுதியாகச் சொல்கிறேன்.
தொடர்ந்து நான் ஒவ்வொரு மாவட்டமாக, சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கே சந்திக்கும் மக்கள் முகங்களை எல்லாம் பார்த்துவிட்டுச் சொல்கிறேன். 2026 தேர்தலிலும் நாம்தான் வெல்வோம், ஏழாவது முறையும் ஆட்சி அமைத்து ஏற்றம் காண்போம் என்று மொழிப்போர் மறவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் இந்த நேரத்தில் உறுதியேற்போம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
The post யு.ஜி.சி. வரைவு நெறிமுறைகளுக்கு எதிராக திமுக மாணவரணி சார்பில் டெல்லியில் மாபெரும் போராட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.