சென்னை: டிஎன்பிஎஸ்சி நடத்திய தொழில்பிரிவு அளவர், வரைவாளர் தேர்வுக்கான ஆன்சர் கீ டிஎன்பிஎஸ்சி தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் அ.ஜான் லூயிஸ் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளில்(பட்டயம்/தொழிற்பயிற்சி நிலை) அடங்கிய தொழிற்பிரிவு/ அளவர் மற்றும் தொழிற்பிரிவு-வரைவாளர் (அமைப்பியல்)ஆகியவற்றிற்கான தேர்வு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த 19ம் தேதி மு.ப./பி.ப.அன்று கணினி வழித்தேர்வாக நடத்தப்பட்டது.
இந்த தேர்வுக்கான உத்தேச விடைக்குறிப்புகள் தேர்வாணைய இணையதளம்(www.tnpsc.gov.in) இன்று(நேற்று) வெளியிடப்பட்டுள்ளன. இந்த உத்தேச விடைகளின் மீது முறையீடு செய்ய விரும்பும் தேர்வர்கள் உத்தேச விடைகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஏழு நாட்களுக்குள் அதாவது வருகிற பிப்ரவரி 1ம் தேதி மாலை 5.45 மணிக்குள் தேர்வாணைய இணையதளத்தில் உள்ள”ஆன்சர் கீ சேலன்ஜ்” என்ற சாளரத்தைப் பயன்படுத்தி மட்டுமே முறையீடு செய்யலாம். இதற்கான அறிவுரைகள், வழிமுறைகள் தேர்வாணைய இணையதளத்திலேயே வழங்கப்பட்டுள்ளன. அஞ்சல் வழியாகவும் மின்னஞ்சல் வழியாகவும் பெறப்படும் முறையீடுகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post டிஎன்பிஎஸ்சி நடத்திய தொழில்பிரிவு அளவர், வரைவாளர் தேர்வு ஆன்சர் கீ வெளியீடு appeared first on Dinakaran.