- எண்ணூர் தாமரைக் குளம்
- பசுமை தீர்ப்பாயம்
- திருவொட்டிரியூர்
- தாமரை குளம்
- சத்யவாணி முத்துநகர்
- வார்டு 1
- திருவொற்றியூர் மண்டலம்...
- அத்துமீறல்
- தின மலர்
திருவொற்றியூர், ஜன.25: பசுமை தீர்ப்பாய உத்தரவின் பேரில், எண்ணூர் தாமரை குளத்தில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். திருவொற்றியூர் மண்டலம், 1வது வார்டுக்கு உட்பட்ட சத்தியவாணி முத்து நகர் அருகே, மாநகராட்சிக்கு சொந்தமான தாமரை குளம் உள்ளது. சுமார் 5.32 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளத்தில் மழைக்காலத்தில் சுற்று வட்டாரத்திலிருந்து வரும் மழைநீர் சேமிக்கப்பட்டு வருகிறது. இதனால், அப்பகுதி மக்களின் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்குகிறது.
இந்நிலையில், இந்த குளத்தில் தனியார் சிலர் ஆக்கிரமித்து வீடுகளை கட்டியிருப்பதால் குளத்தின் பரப்பளவு சுருங்கி, மழைக்காலத்தில் போதிய நீர் சேமிக்க முடியாமல், அருகில் உள்ள குடியிருப்புகளை சூழும் நிலை உள்ளது. மேலும், ஆக்கிரமிப்பு வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் குப்பையை குளத்தில் வீசுவதால் நீர் மாசடைந்து வந்தது. எனவே, இந்த குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயத்தில் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், பொதுமக்களுக்கு நீராதரமாக விளங்கும் தாமரை குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி 2024, டிசம்பர் 9ம் தேதி அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என கடந்த ஆண்டு உத்தரவிட்டது.
அதன்படி தாமரை குளத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, 57 ஆக்கிரமிப்பு வீடுகள் இருப்பது தெரிந்தது. அவற்றை அகற்ற திருவொற்றியூர் மண்டல அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் பல்வேறு காரணங்களால் ஒரு சில வீடுகளை மட்டுமே அதிகாரிகள் அகற்றினர். இந்நிலையில் 2ம் கட்டமாக, திருவொற்றியூர் மண்டல அதிகாரிகள், நேற்று முன்தினம் மீண்டும் தாமரை குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை தொடங்கினர். 2வது நாளாக நேற்றும் 75 மாநகராட்சி ஊழியர்கள், 3 பொக்லைன் இயந்திரங்களுடன் ஆக்கிரமிப்பு வீடுகளை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘பசுமை தீர்ப்பாய உத்தரவின்படி 57 ஆக்கிரமிப்பு வீடுகளில் இதுவரை 25 கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள வீடுகள் தொடர்ந்து அகற்றப்படும்,’’ என்றனர்.
The post பசுமை தீர்ப்பாய உத்தரவின் பேரில் எண்ணூர் தாமரை குளத்தில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்: அதிகாரிகள் நடவடிக்கை appeared first on Dinakaran.