×

ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு ₹6.60 கோடி மதிப்பீட்டில் எம்ஆர்ஐ ஸ்கேன் கருவி

சென்னை, ஜன.25: சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், ₹6.60 கோடி எம்ஆர்ஐ ஸ்கேன் கருவியினை மக்கள் பயன்பாட்டிற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை 2014 பிப்ரவரியில் திறந்து வைக்கப்பட்டது. இது தமிழ்நாட்டின் முதல் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாகும்.

அந்த சிறப்பு மிக்க இம்மருத்துவமனையில் ₹6.60 கோடியில், 1.5 டெஸ்லா எம்ஆர்ஐ ஸ்கேன் கருவி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த கருவி நோயாளிகளின் தலை முதல் கால் வரை இமேஜிங் செய்யலாம். நரம்பியல், இதயம், புற்றுநோயியல், ரத்த நாள அறுவை சிகிச்சை நோயாளிகள், பச்சிளம் குழந்தைகள், இதர வயது குழந்தைகள் மற்றும் உலோக உள்வைப்புகளுடன் உள்ள நோயாளிகளுக்கும் பயன்படுத்தலாம். செயற்கை நுண்ணறிவு மூலம் இக்கருவியை கொண்டு துரிதமாக ஸ்கேன் செய்வதால் குறைந்த நேரத்தில் அதிக நோயாளிகளை ஸ்கேன் செய்யலாம். நோயாளிகள் காத்திருக்கும் நேரம் குறையும். டிஜிட்டல் எக்ஸ்ரே கருவியின் மூலம் நாளொன்றுக்கு 100 பேருக்கும், கேத்லேப் நாளொன்றுக்கு 12 பேருக்கும் ஸ்கேன் செய்யப்பட்டு வருகிறது.

₹34.60 கோடியில் அதிநவீன இயந்திர மனிதவியல் அறுவை சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்ததில் இருந்து இதுவரை 325 நபர்களுக்கு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ரோபோடிக் அறுவை சிகிச்சை செய்வதற்கு தனியார் மருத்துவமனைகளில் ₹15 லட்சம் வரை செலவாகும். இது முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இம்மருத்துவமனையில் முழு உடற்பரிசோதனை மையத்தில் ஆரம்ப கால அளவில் கரு மரபணு குறைபாடுகளை கண்டறியும் கருவியை தொடங்கி வைத்தார். அதேபோல் ₹1.53 கோடி செலவில் புற்றுநோய் கட்டிகளுக்கு சிகிச்சை செய்து கட்டுப்படுத்தும் கருவி தொடங்கப்பட்டது. அந்த கருவியும் மிகச் சிறப்பான அளவில் பயன்பாட்டில் இருந்து கொண்டு வருகிறது. கடந்த மூன்றரை வருடங்களாகவே வெளிப்படைத்தன்மையுடன் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 34000த்திற்கும் மேற்பட்ட அலுவலர்களும், பணியாளர்களும் பயன்பெற்று இருக்கிறார்கள். பல் மருத்துவர்களுக்கும் அந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு ₹6.60 கோடி மதிப்பீட்டில் எம்ஆர்ஐ ஸ்கேன் கருவி appeared first on Dinakaran.

Tags : Omandurar Multi-Distance Hospital ,Chennai ,Public Health Minister ,M. Subramanian ,Tamil Nadu Government Multi-Distance High Specialty Hospital ,Omandurar Government Estate, Chennai ,Dinakaran ,
× RELATED கோபி அரசு மருத்துவமனைக்கு லக்‌ஷயா தேசிய தரச்சான்று