பெரம்பூர், ஜன.25: பெரம்பூரில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேற்று புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால், பயணிகள் அவதிக்குள்ளாகினர். சென்னை சென்ட்ரலில் இருந்து பெரம்பூர் வழியாக அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு புறநகர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் பெரம்பூர் கேரேஜ் ரயில் நிலையத்திற்கும், லோகோ ரயில் நிலையத்திற்கும் இடையே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு சிக்னல் கிடைக்கவில்லை. இதனால் புறநகர் ரயில்கள் செல்வதில் காலதாமதம் ஏற்பட்டது. சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருவள்ளூர் மற்றும் அரக்கோணம் செல்லும் ரயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டன. சில ரயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டன. இதையடுத்து ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். காலை 7.47 மணிக்கு தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு, மின்சார ரயில்கள் பழைய வேகத்துடன் இயக்கப்பட்டன. இந்த தொழில்நுட்ப கோளாறு காரணமாக, பயணிகள் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.
The post தொழில்நுட்ப கோளாறால் புறநகர் ரயில் சேவை பாதிப்பு : பயணிகள் அவதி appeared first on Dinakaran.