புதுடெல்லி: சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது இனிமேல் வயது, இடஒதுக்கீடு சான்றிதழை கட்டாயமாக இணைக்க வேண்டும் என்று யுபிஎஸ்சி அறிவித்துள்ளது. யுபிஎஸ்சி நடத்தி வரும் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான விதிமுறைகள் கடந்த 22ம் தேதி மாற்றி அறிவிக்கப்பட்டன. அந்த அறிவிப்புகளின்படி சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் போது, விண்ணப்பதாரர்கள் வயது மற்றும் இடஒதுக்கீடு தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பிப்பதை கட்டாயமாக்கியுள்ளது.
முன்னதாக, விண்ணப்பதாரர்கள் முதற்கட்டத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகுதான் அத்தகைய ஆவணங்கள் பதிவேற்றப்படும். தற்போது முதல்நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போதே உரிய ஆணவங்களை பதிவேற்றம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் பிரச்னையை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆன்லைன் விண்ணப்பப் படிவத்துடன் தேவையான தகவல்கள், ஆவணங்களை வழங்கத் தவறினால், தேர்வுக்கான விண்ணப்பம் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு 2025 மே 25 அன்று நடைபெறும். தேர்வு மூலம் நிரப்பப்படும் காலியிடங்களின் எண்ணிக்கை தோராயமாக 979 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதில் 38 காலியிடங்கள் ஊனமுற்றவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. பிப்.11 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
The post சிவில் சர்வீஸ் விண்ணப்பத்தில் வயது, இடஒதுக்கீடு சான்றிதழ் கட்டாயம்: யுபிஎஸ்சி புதிய அறிவிப்பு appeared first on Dinakaran.