சங்ககிரி: விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனுடன் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இருப்பது போன்ற படத்தை நான் தான் எடிட் செய்து கொடுத்தேன் என சினிமா இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்தார். இது நாம் தமிழர் கட்சியினர் மட்டுமின்றி மற்ற அரசியல் கட்சியினர், அமைப்பினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபாகரனுடன் சீமான் இருப்பது போன்று படத்தை எடிட் செய்து கொடுத்ததாக கூறிய இயக்குநர் சங்ககிரி ராஜ்குமாருக்கு கடந்த சில நாட்களாக தொலைபேசியிலும், சமூகவலைதளங்களின் மூலமும் நாம் தமிழர் கட்சியினர் மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக சங்ககிரி ராஜ்குமார் நேற்று, தனது சமூகவலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், அண்ணனின் தம்பிகளுக்கு வணக்கம். கடந்த நான்கு, ஐந்து நாட்களாக என் அலைபேசிக்கு நேரடியாகவும், வாட்ஸ்அப் மூலமாகவும் தொடர்ந்து அழைத்துக்கொண்டே இருக்கிறீர்கள். அழைப்பை எடுத்தால், வீட்டில் இருக்கும் பெண்களை வசை பாடுகிறீர்கள் அல்லது மிரட்டுகிறீர்கள். அதற்காக அச்சப்பட்டு இந்த பதிவை எழுதவில்லை. கசப்பை சுவைத்த உங்கள் நாவிற்கு இந்த ஆபாச வார்த்தைகள்தான் ஆறுதல் தரும் என்றால் பேசிவிட்டு போங்கள். இடையிடையே டேய் சங்ககிரி ராஜ்குமார், நீ எந்த ஊர் காரன்டா என்று கேட்டு சிரிப்பும் மூட்டுகிறீர்கள்.
உங்கள் அச்சுறுத்தலுக்கோ, ஆபாச வார்த்தைகளுக்கோ நான் கவலைப்படவில்லை. உங்களிடம் வைக்கும் வேண்டுகோள் ஒன்றே ஒன்று தான். என்னை அழைப்பதற்கு முன்பாக உங்கள் முகப்பு படமாக வைத்திருக்கும் தலைவர் பிரபாகரன் (எழுத்தை மறைத்துள்ளார்) படத்தை நீக்கிவிட்டாவது அழையுங்கள். வீரம் நிறைந்த அவர் புகைப்படத்தை காண்பித்துக் கொண்டே, காதுகளில் உங்கள் அழுக்கு வார்த்தைகளை கேட்பதற்கு அருவருப்பாக இருக்கிறது. உலகே கண்டு வியந்த ஒரு ஒப்பற்ற தலைவரை இழிவு செய்துவிட்டீர்கள். இனியேனும் விட்டுவிடுங்கள்’ எனக்கூறியிருக்கிறார். சினிமா இயக்குநர் சங்ககிரி ராஜ்குமாருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post பிரபாகரனுடன் சீமான் படம் எடிட் எனக்கூறிய இயக்குநர் ராஜ்குமாருக்கு நாதகவினர் மிரட்டல் appeared first on Dinakaran.