வேங்கைவயல் விவகாரம் 3 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: வேங்கைவயல் விவகாரத்தில் விசாரணை முடித்து மூன்று பேருக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் நீர்த்தேக்க தொட்டியை அசுத்தம் (மனித கழிவை கலந்து) செய்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் குறித்து விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நீதிபதியும் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார்.

இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பின்னர் இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சி.எஸ்.மணி, சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்று தெரிவித்தார். இதை மறுத்த தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், வழக்கின் விசாரணை முடிவடைந்து முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக ஜனவரி 20ம் தேதி புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில், வேங்கைவயல், இறையூர் கிராமங்கள் அடங்கிய முடுக்காடு பஞ்சாயத்து தலைவராக உள்ள பத்மா முத்தையா, குடிநீர் தொட்டி ஆப்ரேட்டர் சண்முகத்தை பணி நீக்கம் செய்துள்ளார். இதையடுத்து, பஞ்சாயத்து தலைவரின் கணவரை பழிவாங்கும் வகையில் குடிநீரில் நாற்றம் வருவதாக முரளி ராஜா என்பவர் பொய் தகவலை பரப்பியுள்ளார். அதன்பின்னர் குடிநீர் தொட்டி மீது ஏறிய முத்துகிருஷ்ணன் மற்றும் சுதர்சன் ஆகியோர் இந்த குற்ற செயலில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவித்தார். இதை கேட்ட நீதிபதிகள், இந்த அறிக்கையை பிரமாண மனுவாக தாக்கல் செய்யுமாறு அரசு தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை பிற்பகல் 2.15 மணிக்கு தள்ளி வைத்தனர். வழக்கு மதியம் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, வழக்கு தொடர்பாக புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது சரிதான் என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மற்றொரு மனுதாரர் தரப்பில், குற்றப்பத்திரிக்கையில் வன்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் இல்லை. அரசின் இந்த அறிக்கைக்கு விரிவான பதில் அளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரப்பட்டது. அதற்கு நீதிபதிகள், காவல்துறையினர் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில் இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம். குற்றப்பத்திரிகை மீது அதிருப்தி இருந்தால் கீழமை நீதிமன்றத்தை அணுகலாம். அரசின் அறிக்கைக்கு மார்ச் 10ம் தேதிக்குள் மனுதாரர் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 27ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

The post வேங்கைவயல் விவகாரம் 3 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: