திருத்தணி, ஜன.23: பக்தர்கள் சிரமமின்றி செல்லும் வகையில் திருத்தணி, சிறுவாபுரி முருகன் கோயில்களுக்கு ₹100 கோடி மதிப்பீட்டில் மாற்று பாதைகள் அமைக்கும் திட்டம் குறித்து அமைச்சர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக போற்றப்படும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் இருந்து தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சரவணப் பொய்கை திருக்குளத்தில் இருந்து படிகள் வழியாகவும், மலைப்பாதையில் வாகனங்கள் மூலமாகவும் மலைக்கு வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். ஆடி கிருத்திகை, தைப்பூசம், ஆடிப்பூரம், கிருத்திகை, கந்த சஷ்டி உள்பட முக்கிய நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த தினங்களில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து திருத்தணி நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், மலைப்பாதையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைகின்றனர்.
கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், முருகன் கோயிலுக்கு மேற்கு பகுதியில் மாற்று மலைப்பாதை அமைக்க வேண்டும் என்பது பக்தர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக உள்ளது. அதன்படி கோயிலுக்கு பின்புறத்தில் இருந்து சித்தூர்-திருத்தணி மாநில நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில், இந்து சமய அறநிலையத்துறை முயற்சி செய்து வருவாய்த்துறை சார்பில் நிலம் கையகப்படுத்தப்பட்டு பூர்வாங்க பணிகள் தொடங்கியது. பின்னர் மாற்று மலைப்பாதை திட்டத்தை செயல்படுத்துவதற்கான திட்ட அறிக்கை நெடுஞ்சாலைத்துறை சார்பில் தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மலை கோயிலுக்கு மாற்று மலைப்பாதை திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு, சா.மு.நாசர் ஆகியோர் நேற்று மலைக்கோயிலில் படா செட்டிகுளம் பகுதியில் மாற்று மலைப்பாதை திட்ட செயல்பாடு தொடர்பாக ஆய்வு செய்ய வருகை தந்தனர். அவர்களை திருவள்ளூர் கலெக்டர் த.பிரபுசங்கர், எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ, திருக்கோயில் அறங்காவலர்குழு தலைவர் சு.தரன் ஆகியோர் வரவேற்றனர். மலைக்கோயிலில் படா செட்டிகுளம் பகுதியிலிருந்து அமிர்தபுரம் வரை சுமார் 2 கி.மீ தூரத்திற்கு அமைய உள்ள மாற்று மலைப்பாதை திட்டம் குறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வரைபடம் மூலம் அமைச்சர்களுக்கு விளக்கம் அளித்தனர். திட்ட மதிப்பீட்டு தொகை ₹55 கோடியை நெடுஞ்சாலைத் துறை கணக்கில் செலுத்த இந்து சமய அறநிலைத்துறை தயாராக உள்ளதால், பணிகள் உடனடியாக தொடங்கி இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
தொடர்ந்து, திருத்தணி ரயில் நிலையத்தில் இருந்து மலைக் கோயிலுக்கு அரசு நகரப் பேருந்து இலவச சேவையை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். அதன்பிறகு, நந்தி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கோட்டா ஆறுமுக சுவாமி திருக்கோயில் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள தவில், நாதஸ்வர இசை பயிற்சிப்பள்ளி கட்டிடத்தையும் திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைத்துறை எஸ்ஓடி சந்திரசேகர், நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் செல்வகுமார், கோட்ட பொறியாளர் சிற்றரசு, திருத்தணி உதவி கோட்ட பொறியாளர் ரகுராமன், உதவி பொறியாளர் ஞான அருள்ராஜ், திருத்தணி கோயில் இணை ஆணையர் ரமணி, கோயில் அறங்காவலர்கள் சுரேஷ்பாபு, உஷாரவி, மோகனன், நாகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பெரியபாளையம் அருகே, சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். அதிகளவில் பக்தர்கள் வந்து செல்லும் காலங்களில் குறுகிய சாலை காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால், சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையிலிருந்து சிறுவாபுரி கிராமத்திற்குச் செல்லும் ஒருவழிபாதையான உட்புற சாலையை விரிவுபடுத்தித் தர வேண்டுமென பக்தர்கள் தொடர் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு மாற்றுப்பாதை அமைப்பது தொடர்பாக அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு மற்றும் சா.மு.நாசர் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, உட்புற சாலையில் இருந்து மாற்றுப்பாதை அமைக்கும் திட்டம் குறித்து வரைபடங்களுடன் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அமைச்சர்களுக்கு எடுத்துரைத்தனர்.
சுமார் 4.6 கிமீ சாலை பணிகளுக்காக 12 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாகவும், அறநிலையத்துறை வழங்கும் ₹45 கோடி மதிப்பீட்டில் 6 மாதங்களில் உட்புற சாலையை விரிவுபடுத்தி 4 வழிச்சாலை அமைக்கும் பணிகளை முடித்திட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கனவே உள்ள சாலை 7 முதல் 11 மீட்டர் அகலம் கொண்டதாக இருப்பதால், 32 மீட்டர் அகலத்திற்கு சாலை விரிவுபடுத்தபட உள்ளதாக அமைச்சர் வேலு தெரிவித்தார். தொடர்ந்து, சிறுவாபுரி முருகன் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு சாமி தரிசனம் செய்தார். இந்நிகழ்ச்சியில், கலெக்டர் பிரபு சங்கர், டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ, கோயில் செயல் அலுவலர் பிரகாஷ், சோழவரம் ஒன்றியச் செயலாளர் செல்வ சேகரன், ஆரணி நகரச் செயலாளர் முத்து மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். சித்தூர்-திருத்தணி மாநில நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில், இந்து சமய அறநிலையத்துறை முயற்சி செய்து வருவாய்த்துறை சார்பில் நிலம் கையகப்படுத்தப்பட்டு பூர்வாங்க பணிகள் தொடங்கியது. பின்னர் மாற்று மலைப்பாதை திட்டத்தை செயல்படுத்துவதற்கான திட்ட அறிக்கை நெடுஞ்சாலைத்துறை சார்பில் தயார் செய்யப்பட்டுள்ளது.
பிப்ரவரியில் டெண்டர்
திருத்தணி முருகன் கோயிலுக்கு மேற்கு பகுதியில் மாற்று மலைப்பாதை திட்டத்தை செயல்படுத்த திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மலையிலிருந்து சித்தூர் சாலை வரை 2 கி.மீ தூரம் இந்த திட்டத்திற்காக வனத்துறையிடம் கோப்பு நிலுவையில் உள்ளது. வனத்துறை அனுமதி கிடைத்தவுடன் நிலம் கையகப்படுத்த ₹1.92 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பிப்ரவரியில் டெண்டர் கோரப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
The post பக்தர்கள் சிரமமின்றி செல்லும் வகையில் திருத்தணி, சிறுவாபுரி கோயில்களில் ₹100 கோடியில் மாற்று பாதைகள் திட்டம்: இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க வியூகம் ; அமைச்சர்கள் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.