சென்னை, ஜன.23: ஐஸ்அவுஸ் பகுதியில் 12 வயது சிறுமி ஒருவர் வீட்டில் உள்ள அறையில் மர்மமான முறையில் சேலையில் கழுத்து இறுகிய நிலையில் இறந்து கிடந்தார். இதனால் போலீசார் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை ஐஸ் அவுஸ் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் அருகில் உள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். இவரது தாய் நேற்று காலை 7ம் வகுப்பு படிக்கும் இளைய மகள் மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மூத்த மகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, வேலைக்கு சென்றுவிட்டார். வழக்கம் போல் பள்ளி முடிந்து இளைய மகள் வீட்டிற்கு வந்துள்ளார். அவரது சகோதரி 12ம் வகுப்பு என்பதால் வீட்டிற்கு சற்று தாமதமாக வந்துள்ளார்.
வீட்டின் அறையில் உள்ள தனது சகோதரியை பார்த்த போது, அவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் சேலையில் கழுத்து இறுகிய நிலையில் இறந்து கிடந்தார். இதை பார்த்த அவரது சகோதரி அருகில் இருந்தவர்கள் உதவியுடன் ஐஸ் அவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் உயிரிழந்த சிறுமியை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து, கொலை செய்யப்பட்டாரா அல்லது விளையாடும் போது சேலை கழுத்தில் சிக்கி உயிரிழந்தாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறனர். மேலும், சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். சிறுமி ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் சேலையில் கழுத்து இறுகி இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post ஐஸ்அவுஸ் பகுதியில் சேலையில் கழுத்து இறுகி 12 வயது சிறுமி மரணம்? appeared first on Dinakaran.