சென்னை: துபாயிலிருந்து சென்னைக்கு, விமானத்தில் கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.1.3 கோடி மதிப்புடைய 1.75 கிலோ தங்க கட்டிகள், தங்க நகைகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. மசாஜ் கருவிகளில் மறைத்து கொண்டு வந்த தங்க கட்டிகள், நகைகளை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்து, சென்னையைச் சேர்ந்த கடத்தல் பயணிகள் 2 பேரை கைது செய்தனர். துபாயிலிருந்து தனியார் பயணிகள் விமானம், நேற்று அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. விமானத்தில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது சென்னையைச் சேர்ந்த 2 ஆண்கள், சுற்றுலா பயணிகளாக துபாய்க்கு போய்விட்டு இந்த விமானத்தில் சென்னைக்கு திரும்பி வந்தனர்.
அவர்கள் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை நிறுத்தி விசாரித்தனர். அவர்களின் உடைமைகளை சோதனை செய்தனர். உடைமைகளில் 4 மசாஜ் கருவிகள் இருந்ததை கண்டுபிடித்தனர். அந்த கருவிகளை திறந்து பார்த்தபோது, தங்க கட்டிகள், நகைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. மசாஜ் கருவிகளில் 1.75 கிலோ தங்க கட்டிகள் மற்றும் நகைகள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.1.3 கோடி. இதனைத்தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்தனர். கடத்தி வந்த 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post துபாயிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ1.3 கோடி மதிப்புள்ள தங்க கட்டிகள், நகைகள் பறிமுதல்: விமான நிலைய சுங்க அதிகாரிகள் அதிரடி appeared first on Dinakaran.