×

ஆத்தூரில் பரபரப்பு கருவின் பாலினத்தை தெரிவிக்கும் கும்பலை சேர்ந்த இருவர் கைது

*தர்மபுரி இணை இயக்குனரின் ரெய்டில் சிக்கினர்

கெங்கவல்லி : ஆத்தூரில் கர்ப்பிணி பெண்களுக்கு கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை தெரிவிக்கும் கும்பலை சேர்ந்த இருவர், தர்மபுரி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் அதிரடி ரெய்டில் சிக்கினர்.

அவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை கண்டறிய சேலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அழைத்து சென்று, வீட்டில் வைத்து ஸ்கேன் மூலம் கண்டறியப்படுவதாக தர்மபுரி மாவட்ட இணை இயக்குனர் சாந்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், தர்மபுரி மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் சாந்தி தலைமையில், மருத்துவ குழுவினர் தர்மபுரியில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டு, ரஞ்சித் என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், சேலம் மாவட்டம், ஆத்தூர், பஸ் ஸ்டாண்ட் அருகில், மேரி என்பவரது வீட்டில் வைத்து கர்ப்பிணிக்கு கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை ஸ்கேன் மூலம் கண்டறியப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து, ஆத்தூர் பகுதிக்கு வந்த மருத்துவ குழுவினர் மேற்கு மாதாகோவில் தெருவில் சத்தியா என்பவர் வாடகைக்கு குடியிருந்து வரும் வீட்டில், அக்கிசெட்டிபாளையத்தை சேர்ந்த கருணாநிதி மகன் சௌந்தர்ராஜன், கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை கண்டறிய ஸ்கேன் மெஷின் வைத்திருந்ததும், கருக்கலைப்புக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் நடைபெற்ற விசாரணையில், ஆத்தூர் கோட்டை பகுதியை சேர்ந்த முனியன் மகன் வெங்கட்ராமன் (எ) வெங்கடேஷ் என்பவர் மூலம் கர்ப்பிணி பெண்களை அழைத்து வந்து ஸ்கேன் செய்ததும் தெரியவந்தது.

கர்ப்பிணி ஒருவரை அழைத்து வந்து, பரிசோதனை மேற்கொள்வதற்கு ₹12 ஆயிரம் வாங்கிக் கொண்டு கருக்கலைப்பு செய்தது தெரியவந்தது. இது சம்பந்தமாக ஆத்தூர் டவுன் காவல் நிலையத்துக்கு இணை இயக்குனர் சாந்தி தகவல் தெரிவித்தார்.

தகவலின்பேரில் டவுன் போலீசார் சௌந்தரராஜன்(48), வெங்கடேஷ்(45) ஆகிய இருவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் சாந்தி அளித்த புகாரின் அடிப்படையில், இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ஸ்கேன் இயந்திரங்கள், மருந்து, மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். ஆத்தூர் மைய பகுதியான பஸ் நிலையம் அருகில் கருக்கலைப்பு செய்யும் கும்பல் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post ஆத்தூரில் பரபரப்பு கருவின் பாலினத்தை தெரிவிக்கும் கும்பலை சேர்ந்த இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Athur ,Dharmapuri ,Raid Sikinar Kengavalli ,Atur ,Dharmapuri District Health Department ,Action ,Raid ,
× RELATED ஆத்தூரில் மாஜி விஏஓ தூக்கிட்டு சாவு