நண்பனை கொன்றவர்களை பழிதீர்க்க கொலை திட்டம் தீட்டிய ரவுடிகள் சுற்றிவளைப்பு: தப்ப முயன்ற 3 பேருக்கு எலும்பு முறிவு, கத்தி, கோடாரி உள்ளிட்டவை பறிமுதல்

திருவொற்றியூர்: காசிமேடு திடீர் நகரைச் சேர்ந்தவர் சரித்திர பதிவேடு ரவுடி உலகநாதன். இவரது மனைவி மாலதி, கஞ்சா வியாபாரி. இவர்கள் இருவரும் கடந்த புதன்கிழமை இரவு வீட்டில் இருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த வல்லரசு என்பவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து முன்விரோத தகராறில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில், இருவரும் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் வழக்குப்பதிவு செய்து, வல்லரசு, அந்தோணி, எபினேசர், எழிலரசன், மனோஜ், குணசேகரன் என 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த கொலைக்கு பழிக்குப்பழி தீர்க்க உலகநாதனின் கூட்டாளிகள் கோபி (எ) வெங்கடேசன், ஆகாஷ், செல்லதுரை, கிஷோர், ஆகிய 4 பேர், பயங்கர ஆயுதங்களுடன் காசிமேடு திடீர் நகர் பூங்கா அருகே பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும் கிஷோர், கோபி (எ) வெங்கடேசன், ஆகாஷ் ஆகிய 3 பேரும் மதில்சுவர் ஏறி குதித்து தப்ப முயன்றபோது, 3 பேருக்கும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

அவர்கள் 3 பேரையும் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனையடுத்து, மைதானத்தில் பதுங்கி இருந்த செல்லதுரையை மடக்கி பிடித்தனர். அவரிடம் இருந்து, 7 கத்தி, 1 கோடாரி, ஒரு கிலோ கஞ்சா ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர் இச்சம்பவம் காசிமேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post நண்பனை கொன்றவர்களை பழிதீர்க்க கொலை திட்டம் தீட்டிய ரவுடிகள் சுற்றிவளைப்பு: தப்ப முயன்ற 3 பேருக்கு எலும்பு முறிவு, கத்தி, கோடாரி உள்ளிட்டவை பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: