×
Saravana Stores

தீபாவளி சிறப்பு பஸ்கள் நாளை முதல் இயக்கம்: எந்த ஊருக்கு பேருந்து நிலையம்?

சென்னை: தீபாவளி சிறப்பு பேருந்துகள் நாளை முதல் இயக்கப்படவுள்ள நிலையில், எந்த ஊருக்கு எந்த பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் என பேருந்துகளின் விவரங்களை போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்ட அறிக்கை: போக்குவரத்துத்துறை அமைச்சர் ஏற்கனவே அளித்த அறிவிப்பின்படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்.28, 29 மற்றும் 30 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்து தினசரி இயக்கப்படுகிற 2,092 பேருந்துகுளுடன் 4,900 சிறப்பு பேருந்துகள் என மூன்று நாட்களும் சேர்த்து 11,176 பேருந்துகளும் ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 2,910 சிறப்பு பேருந்துகளும் ஆக ஒட்டுமொத்தமாக 14,086 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் பின்வரும் பேருந்து நிலையங்களிலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் விவரம் வருமாறு:

* கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்: திருச்சி, கரூர், மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், மார்த்தாண்டம், திருவனந்தபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், பொள்ளாச்சி, ராமேஸ்வரம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம், திண்டிவனம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், விருத்தாசலம், அரியலூர், திட்டக்குடி, செந்துறை, ஜெயங்கொண்டம், போளூர், வந்தவாசி மற்றும் திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் மற்றும் திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் செல்லும் பேருந்துகள் திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் மார்கமாக பட்டுக்கோட்டை, மன்னார்குடி செல்லும் அனைத்து வழித்தட பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படும்.

* மாதவரம் புதிய பேருந்து நிலையம்: பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள், வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள்.

* கோயம்பேடு பேருந்து நிலையம்: வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர் மற்றும் பெங்களூரு செல்லும் பேருந்துகள் மற்றும் திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, வேதாரண்யம். திருவாரூர் மற்றும் திருத்துறைப்பூண்டி செல்லும் பேருந்துகள்

மேற்கண்ட பேருந்து நிலையத்திலிருந்து அக்.28 முதல் 30ம் தேதிவரை பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், 30ம் தேதி கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்த்து அக்.27, 28 ஆகிய நாட்களில் தங்கள் பயணத்தை முன்கூட்டியே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

The post தீபாவளி சிறப்பு பஸ்கள் நாளை முதல் இயக்கம்: எந்த ஊருக்கு பேருந்து நிலையம்? appeared first on Dinakaran.

Tags : Diwali ,Chennai ,Mohan ,Managing Director ,Government Rapid Transport Corporation ,Dinakaran ,
× RELATED பாரிமுனை ரிசர்வ் வங்கியில் பெண்...