×
Saravana Stores

ஏதாவது சொல்லிக்கொண்டே இருப்பார் எடப்பாடிக்கு வேறு வேலையே கிடையாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி ஏதாவது சொல்லிக்கொண்டு இருப்பார். அவருக்கு வேறு வேலையே கிடையாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை அண்ணா அறிவாலய வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் வருமாறு:
கே: மதுரையில் தொடர்ந்து கனமழை பெய்து கொண்டிருக்கிறது. அரசின் நடவடிக்கை என்ன?
ப: தொடர்ந்து பெய்யவில்லை. நேற்று தான் (நேற்று முன்தினம் தான்) மழை பெய்திருக்கிறது. இரவோடு இரவாக தண்ணீரை எல்லாம் எடுத்தாகி விட்டது. மாவட்டத்தின் இரண்டு அமைச்சர்களும் முகாமிட்டு பணி மேற்கொண்டு வருகிறார்கள். எட்டு இடங்களில் தான் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்திருக்கிறது. வேறு ஒன்றும் பிரச்னையில்லை. இன்றைக்கு மழை வரும் என்று வானிலை மையம் முன்னெச்சரிக்கை அறிவிப்பு செய்திருக்கிறது. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கிறது. சென்னையிலிருந்து பொறுப்பு அதிகாரிகளை அனுப்பி வைத்திருக்கிறோம். அனைத்து நடவடிக்கைகளையும் உடனுக்குடன் செய்யவேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். நிவாரணப் பணிகளும் அங்கு நடந்து கொண்டிருக்கிறது.
கே: வானிலை மையம் வேறு ஏதாவது மாவட்டத்தில் மழை பெய்யும் என்று சொல்லியிருக்கிறார்களா, கோயம்புத்தூரிலும் பெய்து கொண்டிருக்கிறது.
ப: அப்படி ஒன்றும் இல்லை. தென் மாவட்டங்களில் தான் மழை பெய்து கொண்டிருக்கிறது.
கே: சென்னையில் மழை பெய்தால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் போன்று திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை போன்ற மாவட்டங்களுக்கு இதுபோன்ற திட்டங்கள் ஏதாவது இருக்கிறதா?
ப: அனைத்து ஊர்களிலும் மாநகராட்சி சார்பாக பாதாள சாக்கடை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இப்போது மழை வருவதை வைத்து அதற்கேற்றார்போல் நாங்கள் முடிவெடுப்போம்.
கே: மகளிர் உரிமை தொகையை தற்போதைய அரசு கடன் வாங்கித் தான் ஒவ்வொரு மாதமும் வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்று எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு வைத்திருக்கிறார். அதுபற்றி…?
ப: அவர் சொல்லிக்கொண்டு இருப்பார். அவருக்கு வேறு வேலையே கிடையாது. அவர் பெயர் பத்திரிகையில் வரவேண்டும். அவர் முகம் அடிக்கடி டிவியில் வரவேண்டும் என்பதற்காக சொல்லிக் கொண்டிருப்பார். அதற்கெல்லாம் நாங்கள் கவலைப்படுவதில்லை.
கே: ஒன்றிய அமைச்சருடன் மெட்ரோ ரயில் நிறுவனத்தில் இன்றைக்கு ஆய்வு நடந்திருக்கிறது. அதுபற்றி…..
ப: ஆமாம், ஏற்கனவே ஒன்றிய அரசு அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுத்து நிதி ஒதுக்கி அறிவித்திருக்கிறார்கள். அதனால் அந்த நிதியை விரைவில் வழங்கவேண்டும் என்று ஒன்றிய அமைச்சரிடம் இன்று நாங்கள் சொல்லியிருக்கிறோம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.

The post ஏதாவது சொல்லிக்கொண்டே இருப்பார் எடப்பாடிக்கு வேறு வேலையே கிடையாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Etapadi ,K. ,Stalin ,Chennai ,Edappadi ,K. Stalin ,Tamil Nadu ,Mu. K. Stalin ,Anna Intellectual Complex ,Chief Minister ,Dinakaran ,
× RELATED நாமக்கல்லில் கலைஞர் சிலை அமைவது மிக...