×
Saravana Stores

ரஷ்ய அதிபர் புடினுடன் பிரதமர் மோடி சந்திப்பு: உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து முக்கிய பேச்சுவார்த்தை

கசான்: ரஷ்யா-உக்ரைன் மோதல் அமைதியான முறையில் தீர்க்கப்பட வேண்டும் என்றும், அதற்கு சாத்தியமான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க இந்தியா தயாராக உள்ளதாகவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். ரஷ்யா, உக்ரைன் இடையேயான போர், ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் போர் என உலகமே போர் சூழலுக்கு மத்தியில் சிக்கியுள்ள நிலையில், உலகளாவிய விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்கான 16வது பிரிக்ஸ் மாநாடு ரஷ்யாவின் கசான் நகரில் நேற்று தொடங்கியது.

இம்மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி 2 நாள் பயணமாக ரஷ்யாவுக்கு நேற்று புறப்பட்டுச் சென்றார். கசான் நகரை சென்றடைந்த அவருக்கு அங்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி தங்கிய ஓட்டலுக்கு ஏராளமான இந்திய வம்சாவளிகள் குவிந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத் தொடர்ந்து, மாநாட்டிற்கு முன்பாக பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்றார். இதில் 3 ஆண்டை எட்ட உள்ள ரஷ்யா, உக்ரைன் போர் குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது பிரதமர் மோடி, ‘‘கடந்த 3 மாதங்களில் ரஷ்யாவுக்கு எனது 2வது பயணம். இது, இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான உறவையும் ஆழமான நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது. ரஷ்யா-உக்ரைன் மோதல் பிரச்னையில் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். நான் முன்பு கூறியது போல், பிரச்னைகள் அமைதியான முறையில் தீர்க்கப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். அமைதி, ஸ்திரத்தன்மை விரைவில் திரும்புவதை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்.

எங்கள் முயற்சிகள் அனைத்தும் மனிதநேயத்திற்கு முன்னுரிமை அளிக்கின்றன. உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர சாத்தியமான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது’’ என்றார். பிரிக்ஸ் மாநாட்டை தொடர்ந்து இன்று பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திப்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியா, சீனா இடையேயான பேச்சுவார்த்தையில் எல்லை பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ள நிலையில், மோடி, ஜின்பிங் சந்திப்பு பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

* வளரும் பிரிக்ஸ்
பிரிக்ஸ் அமைப்பு முதலில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா நாடுகள் இணைந்து உருவாக்கின. 2 ஆண்டுக்குப் பிறகு தென் ஆப்ரிக்கா இணைந்தது. கடந்த ஆண்டு, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் பிரிக்ஸ் அமைப்பில் இணைந்தன. தற்போது 10 நாடுகள் கொண்ட பிரிக்ஸ் அமைப்பில் கியூபா உள்ளிட்ட 30 நாடுகள் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன.

* மொழி பெயர்ப்பாளர் தேவைப்படாத நட்பு
பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது தொடக்க உரையாற்றிய ரஷ்ய அதிபர் புடின், ‘‘எந்த ஒரு மொழிபெயர்ப்பாளரும் இல்லாமல் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளக் கூடிய நெருக்கமான நட்பை நாங்கள் கொண்டுள்ளோம். இந்தியா-ரஷ்யா ஒத்துழைப்பை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம்’’ என இந்தியா உடனான ஆழமான உறவை புகழ்ந்து பேசினார். மேலும், பிரிக்ஸ் நாடுகளுக்குள் ஒத்துழைப்பை வலுப்படுத்த கசானில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் புடின் வலியுறுத்தினார்.

The post ரஷ்ய அதிபர் புடினுடன் பிரதமர் மோடி சந்திப்பு: உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து முக்கிய பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Tags : PM ,Modi ,President ,Putin ,Ukraine ,KAZAN ,VLADIMIR PUTIN ,RUSSIA ,INDIA ,Hamas ,Hizbullah ,Dinakaran ,
× RELATED கருணை, நல்லெண்ணத்தின் மூலமே உலகை மாற்ற முடியும்: பிரதமர் மோடி பேச்சு