ஆண்டிமடம் அருகே சூரக்குழியில் நீடித்த நிலையான கரும்பு சாகுபடி பயிற்சி

 

ஜெயங்கொண்டம், அக்.19: ஆண்டிமடம் வட்டாரம் சூரக்குழி கிராமத்தில் வேளாண்மை துறையின் கீழ் இயங்கும் அட்மா திட்டம் மூலம் மாவட்டத்திற்கு உள்ளான விவசாயிகள் பயிற்சி நீடித்த நிலையான கரும்பு சாகுபடி என்னும் தலைப்பில் விவசாயிகளுக்கு பயிற்சி நடத்தப்பட்டது. இப் பயிற்சியில் எம் ஆர் கே கூட்டுறவு சர்க்கரை ஆலை சேத்தியாத்தோப்பு தலைமை கரும்பு அலுவலர் ரவி கிருஷ்ணன் பேசும்போது, சாதாரண கரும்பு சாகுபடிக்கும் நீடித்த நவீன கரும்பு சாகுபடிக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை குறித்து எடுத்துரைத்தார்.

கிரீடு வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநர் திருமலைவாசன் நீடித்த நிலையான கரும்பு சாகுபடி இயக்கத்தில் உள்ள முக்கிய தொழில்நுட்பங்களான கரும்பு நாற்று தயார் செய்ய கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்து எடுத்துரைத்தார். மேலும் அப்பகுதி சர்க்கரை ஆலை கரும்பு அலுவலர் ராஜா பேசுகையில், கரும்பு நடவு செய்தல் சொட்டுநீர் மூலம் உரப்பாசனம் மற்றும் இதர பராமரிப்புகள் பற்றி எடுத்துக் கூறினார். முன்னதாக வரவேற்று பேசிய அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் விஜயகுமார் அட்மா திட்டங்கள் குறித்தும் அதன் செயல்பாடுகள் பற்றியும் விளக்கினார். இப் பயிற்சியில் ஆண்டிமடம் வட்டாரத்தை சார்ந்த கரும்பு சாகுபடி செய்யும் 40 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

The post ஆண்டிமடம் அருகே சூரக்குழியில் நீடித்த நிலையான கரும்பு சாகுபடி பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: