பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் பாதுகாக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் உதவ வேண்டும்: முத்தரசன் வேண்டுகோள்

சென்னை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் பாதுகாக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் உதவ வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதாலும், மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாலும் தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்களில் கடுமையான கனமழை பெய்யும் என வானிலை அறிக்கை எச்சரித்துள்ளது. தலைநகர் சென்னை உட்பட பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் (சிவப்பு வண்ண எச்சரிக்கை) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மழைக்கால பேரிடரை எதிர்கொள்ளவும், மக்கள் இயல்பு வாழ்க்கையை பாதுகாக்கவும் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் உயர் அதிகாரிகள் கூடி முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து துணை முதல்வர் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் மின்சாரம், பால் போன்ற அத்தியாவசிய பொருள்கள் தடையின்றி பொதுமக்களுக்கு கிடைக்க செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த இயற்கை பேரிடரில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் பாதுகாக்கவும், பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் உடனடி நிவாரணம் கிடைக்கவும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் அமைப்புகளும், உறுப்பினர்களுடன் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

The post பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் பாதுகாக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் உதவ வேண்டும்: முத்தரசன் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: