×

இணையவழி மோசடி குறித்து புகார் அளிக்க 1930ஐ அழைக்கவும்: சைபர்கிரைம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டின் இணையவழி குற்றதடுப்புப்பிரிவு தலைமையகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட இணையவெளிரோந்து குழுவானது, தேசிய சைபர்கிரைம் அறிக்கையிடல் போர்டல் (cybercrime.gov.in) போன்ற போலியான இணையதளத்தை அடையாளம் கண்டுள்ளது. இந்த இணையதளத்தில் “உங்கள் கணினி முடக்கப்பட்டுள்ளது” என்று அரசின் சைபர் போர்டலில் இருந்து தகவல் தெரிவிப்பது போல் காண்பிக்கப்பட்டு, மேலும் அதில் “கார்டு விவரங்கள், காலாவதி தேதி மற்றும் CVV” போன்ற முக்கியமான நிதித்தகவலைப் பதிவு செய்து பணம் பறிக்க வழிவகை செய்ய்யப்பட்டிருந்தது.

இணையவெளிரோந்து என்றால் என்ன?
இணையவெளிரோந்து என்பது இணையத்தைப் பயன்படுத்தி இணையகுற்றங்களைக் கண்டறிந்து தடுப்பதற்கான ஒருவழியாகும். இணையத்தில் தீங்கு விளைவிக்கும் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் இணையம் சார்ந்த தகவல்களை திரட்டுவதே இதன் நோக்கமாகும். இணையவெளிரோந்து மூலம் இணையகுற்றங்களை அவற்றின் ஆரம்பகட்டத்திலேயே தடுக்கலாம். இதனால் ஒருபாதுகாப்பான இணையவெளியை நம்மால் உறுதிசெய்யமுடியும். சைபர் குற்றங்களின் அச்சுறுத்தலைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க.

தமிழ்நாடு இணையவழி குற்றதடுப்புபிரிவு. சமூக ஊடகங்கள் மற்றும் சேட்டிங்செயலிகள் (வாட்ஸாப், டெலெகிராம்) உள்ளிட்ட இணையவெளியில் மோசடி நடவடிக்கைகளை கண்காணிக்க இணையவெளிரோந்து குழுவை உருவாக்கியுள்ளது. இக்குழுவால் அடையாளம் காணப்பட்ட இணையதளம் (https://infaulwnmxcyou) அதனை கிளிக் செய்யும் பொழுது முழுத்திரையில் வருவதற்கான உள்ளமைந்த அமைப்பைப் பெற்றிருந்தது. அதில் நீங்கள் சில ஆபாச இணையதளங்களைப் பார்த்ததால் உங்கள் கணினி முடக்கப்பட்டுள்ளது” என்ற செய்தியோடு IPC பிரிவுகளையும் உள்ளிட்டு 30,290 ருபாய் அபராதம் என காண்பித்து பொதுமக்களை ஏமாற்ற இணைய மோசடிக்காரர்கள் முற்பட்டு உள்ளனர்.

இந்த அபராதத்தொகையை கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி மட்டுமே செலுத்த முடியும் என்ற செய்தியோடு கிரெடிட்கார்டு விவரங்களையும் உள்ளீடு செய்து பணம் செலுத்தும் வகையில் வடிவமைத்துள்ளனர். இந்த கிரெடிட்கார்டு விவரங்கள் இதன் மூலம் திருடப்பட்டு பின்னர் பணம் மோசடி செய்யப்படுகிறது. இக்குழு அறிக்கையின் அடிப்படையில், விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டு, 2021 தகவல்தொழில் நுட்பவிதிகளின்படி, இந்த மோசடி இணையதளத்திற்கு சேவை வழங்கிய சீனாவில் உள்ள இணைய பதிவாளருக்கு தெரிவிக்கப்பட்டு, சட்டவிரோத இணையதளம் உடனடியாக அகற்றப்பட்டது.

இந்நிகழ்வு URLகளின் உண்மை தன்மையை சரிபார்க்க வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. இல்லையெனில் குறிப்பிடத்தக்க நிதி இழப்புகளை ஏற்படுத்தும்.

இப்போதுடிரெண்டிங்:
இந்திய தபால்துறையில் இருந்து வந்ததாகக் கூறி மற்றொரு மோசடி தற்போது நிலவி வருகிறது. “உங்கள் பார்சலை எங்களால் டெலிவரி செய்ய முடியவில்லை. மேலும் டெலிவரி செய்ய மீண்டும் முயற்சிக்க கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்க” என்று SMS வருகின்றது. இதனை கிளிக் செய்யும் பொழுது பார்ஸலை திரும்ப எடுத்துவருவதற்கான கட்டணமாக (Re-attempt fee) 25 INR கோருகிறது. இதுவும் கிரெடிட் கார்டு விவரங்களை உள்ளீடு செய்து பணம் செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சைபர்பாதுகாப்புக்கான ஆலோசனை.
1. இணையத்தள URL ஐச்சரிபார்க்கவும்: மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் அரசு இணையதளத்தைப் போலவே போலியான இணையதளத்தை உருவாக்குகிறார்கள், ஆனால் சிறியவேறுபாடுகள் இருக்கும். அதனை கவனமுடன் பார்க்க வேண்டும்.
2. HTTPS ஐச்சரிபார்க்கவும்: சட்டப்பூர்வமான இணையதளங்கள் HTTPS பயன்படுத்துகின்றன. HTTPS என்பது பயனர்தரவு பாதுகாப்பானது மற்றும் இணையதளத்தின் உரிமை சரிபார்க்கப்பட்டது என்பதை உறுதி செய்கிறது.

3. எழுத்துப்பிழைகளைக் கவனியுங்கள்: போலி இணையதளங்களில் பெரும்பாலும் எழுத்துப்பிழைகள் இருக்கும். அரசாங்க இணையதளங்கள் எப்போதும் gov.in என்று முடிவடைவதால், டொமைன் பெயரைக் கவனமாகப் பார்க்கவும்
4.பாப்-அப்களில் எச்சரிக்கையாக இருங்கள் எந்த இணையதளத்தையும் அணுகும் போது. பாப்- அப்களை கவனமாகப் பார்த்து, தேவைப்பட்டால் மட்டும் அனுமதிக்கவும்.
5. விளம்பரங்களில் கிளிக் செய்ய வேண்டாம். இணையதளங்களில் காட்டப்படும் விளம்பரங்கள் முறையற்ற ஆதாரங்களில் இருந்து இருக்கலாம். அத்தகைய விளம்பரங்களை கிளிக் செய்ய வேண்டாம்

6. நீங்கள் உள்ளிடுவதற்கு முன் சிந்தியுங்கள்: கிரெடிட்கார்டு எண். CVV போன்ற முக்கியமான நிதித்தகவலை உள்ளிடுவதற்கு முன். எப்போதும் பலமுறை யோசியுங்கள். புகார் அளிக்க நீங்கள் இதே போன்ற மோசடிகளுக்கு ஆளாகியிருந்தால் அல்லது சந்தேகத்திற்கிடமான செயலைச் சந்தித்திருந்தால், சைபர்கிரைம் கட்டணமில்லா தொலைபேசி எண் 1930ஐ அழைத்து சம்பவத்தைப் புகாரளிக்கவும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரைப்பதிவு செய்யவும்.

The post இணையவழி மோசடி குறித்து புகார் அளிக்க 1930ஐ அழைக்கவும்: சைபர்கிரைம் தகவல் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Tamil Nadu ,National Cybercrime Reporting Portal ,Dinakaran ,
× RELATED தலைமைச் செயலகத்திற்கு வரக்கூடிய...