×

வெறுப்பு அரசியலை உமிழும் பாஜகவுக்கு தமிழகத்தில் இனி வேலை இல்லை; அன்பின் அரசியலை ராகுல் காந்தி செய்து வருவதால் பாஜகவால் பொறுக்க முடியவில்லை : காங்கிரஸ் சார்பில் நடந்த கண்டன கூட்டத்தில் கனிமொழி பேச்சு

சென்னை: வெறுப்பு அரசியலை உமிழும் பாஜகவுக்கு தமிழகத்தில் இனி வேலை இல்லை என்றும், அன்பின் அரசியலை ராகுல் காந்தி செய்து வருவதால் பாஜகவால் பொறுக்க முடியவில்லை என்றும் காங்கிரஸ் சார்பில் நடந்த கண்டன கூட்டத்தில் கனிமொழி பேசினார். தமிழக காங்கிரஸ் சார்பில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் ஆர்எஸ்எஸ்-பாஜகவின் வெறுப்பு அரசியலை எதிர்த்து மாபெரும் கண்டனக் கூட்டம் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை வகித்தார். சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார், மேலிட பொறுப்பாளர்கள் அஜோய் குமார், சூரஜ் ஹெக்டே, மூத்த தலைவர்கள் தங்கபாலு, ஈவிகேஎஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர், கிருஷ்ணசாமி, கே.எஸ்.அழகிரி, பீட்டர் அல்போன்ஸ், பொருளாளர் ரூபி மனோகரன் ஆகியோர் வரவேற்புரையாற்றினர்.

கூட்டத்தில், திமுக எம்பி கனிமொழி கருணாநிதி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொகிதீன், மக்கள் நீதி மய்ய ஊடக பிரிவு செயலாளர் முரளி அப்பாஸ், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கொமதேக தலைவர் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் கண்டன உரயைாற்றினர்.

கூட்டத்தில் கனிமொழி எம்பி பேசியதாவது: ஒன்றிய பாஜ அரச, அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே செயல்பட்டு கொண்டிருக்கிறது. இட ஒதுக்கீட்டு மசோதா நிறைவேற்றி விட்டதாக சொல்கிறார்கள். ஆனால் உண்மையிலேயே அந்த மசோதாவை நிறைவேற்றி விட்டார்களா? என்பது தெரியவில்லை. மக்களை ஏமாற்றும் ஆயுதமாக மதத்தை பயன்படுத்தி வருகிறார்கள். இது சரியான நடைமுறை கிடையாது. இந்த போலியான வேலை இனியும் பலிக்காது. உண்மையான அரசியலை செய்யும் ராகுல் காந்தியை பழித்து பேசுகிறார்கள்.

அவருக்கு மக்களை நேசிக்க மட்டும் தான் தெரியும். நேர்மையான அரசியலைத்தான் செய்ய தெரியும். அன்பின் அரசியலை ராகுல் காந்தி செய்து வருவதால், அதை பொறுக்க முடியாமல் பதிலுக்கு வெறுப்பு அரசியலை உமிழ்ந்து வருகிறார்கள். வெறுப்பின் விதையை பாஜகவினர் விதைக்கின்றனர். ராகுல்காந்தி அன்பின் விதையை விதைக்கிறார். எனவே தேவையற்ற உருட்டல் மிரட்டல் எங்களிடம் எடுபடாது. தமிழகத்தில் பாஜகவுக்குவேலை இல்லை. எனவே அவர்கள் மற்ற மாநிலங்களுக்கு சென்று அரசியல் செய்து கொள்ளட்டும். ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜ இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், மாநில துணை தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், மாநில பொதுச் செயலாளர்கள் தளபதி பாஸ்கர், ஆலங்குளம் காமராஜ், இல.பாஸ்கர், எஸ்.ஏ.வாசு, அமைப்பு செயலாளர் ராம்மோகன், தமிழக காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் துறை தலைவர் சந்திர மோகன், இணை செயலாளர் எஸ்.கே.நவாஸ், வழக்கறிஞர்கள் ராஜேஷ், ஹேமச்சந்திரன், அருண் பிரகாஷ், அருணாசலம், சுசிதரன், ஆர்டிஐ பிரிவு துணை தலைவர் மயிலை தரணி, இலக்கிய அணி தலைவர் புத்தன், கவுன்சிலர்கள் தீர்த்தி, சுரேஷ்குமார், ராஜன், திலகர், சங்கீதா, சுமதி, அமிர்தவர்ஷினி, சுகன்யா, சுபாஷினி, தனலட்சுமி, பானுபிரியா மாவட்ட துணை தலைவர் மன்சூர் அலிகான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்கான ஏற்பாடுகளை, எம்எல்ஏக்கள் அசன் மவுலானா, துரை சந்திரசேகர், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், டில்லி பாபு, எம்.ஏ.முத்தழகன், அடையாறு துரை, ஆர்.எஸ்.செந்தில் குமார், சுந்தரமூர்த்தி, யுவராஜ், ஆர்.எம்.தாஸ் ஆகியோர் செய்திருந்தனர்.

The post வெறுப்பு அரசியலை உமிழும் பாஜகவுக்கு தமிழகத்தில் இனி வேலை இல்லை; அன்பின் அரசியலை ராகுல் காந்தி செய்து வருவதால் பாஜகவால் பொறுக்க முடியவில்லை : காங்கிரஸ் சார்பில் நடந்த கண்டன கூட்டத்தில் கனிமொழி பேச்சு appeared first on Dinakaran.

Tags : BJP ,Tamil Nadu ,Rahul Gandhi ,Kannali ,Congress ,Chennai ,Khanizhi ,Tamil Nadu Congress ,Dinakaran ,
× RELATED வேலையின்மை எனும் நோயை பாஜக பரப்பியுள்ளது: ராகுல்