×

பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்க தாம்பரம் – திருச்சி இடையே இன்டர்சிட்டி சிறப்பு ரயில்: டிசம்பர் 31ம் தேதி வரை வாரத்தில் 5 நாட்கள் இயக்கம்

சென்னை, அக்.9: பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தாம்பரம் – திருச்சி இடையே பகல் நேர இன்டர்சிட்டி சிறப்பு ரயில், வரும் 11ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை இயக்கப்படுகிறது. சென்னையில் வசிக்கும் மக்கள் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில், தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதனால் பண்டிகை நாட்களில் பஸ், ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும். சென்னையில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தான். இவர்கள் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களை தங்கள் சொந்த ஊர்களில் கொண்டாட செல்வது வழக்கம்.

இந்த பண்டிகை நாட்களில் ரயில்களிலும், பஸ்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும். இந்த ஆண்டில் இந்த மாதத்தில் (அக்டோபர்) ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை வருகிறது. ஆயுத பூஜை வரும் 11ம் தேதி கொண்டாடப்படுகிறது. 12ம் தேதி விஜயதசமி, 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறையாக உள்ளன. தீபாவளி பண்டிகைக்கு முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன. இதனால், பண்டிகை நாட்களில் சிறப்பு ரயில் இயக்கப்படுமா, என பயணிகள் எதிர்பார்த்து இருந்தனர். இந்நிலையில், வரும் 11ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து திருச்சிக்கு வாரத்தில் 5 நாட்கள் (திங்கட்கிழமை, வியாழக்கிழமை தவிர்த்து) பகல் நேர இன்டர்சிட்டி சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றன.

இந்த ரயில் (06190) செவ்வாய், புதன், வெள்ளி, சனி, ஞாயிறு என வாரத்தில் 5 நாட்களும் திருச்சியில் இருந்து காலை 5.35 மணிக்கு புறப்பட்டு தஞ்சைக்கு 6.24 மணிக்கும், கும்பகோணத்திற்கு 6.58 மணிக்கும், மயிலாடுதுறைக்கு 7.28 மணிக்கும், சீர்காழிக்கு 7.52 மணிக்கும், சிதம்பரம், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்திற்கு மதியம் 12.30 மணிக்கு செல்லும். பின்னர் அங்கிருந்து இந்த ரயில் (06191) மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டு சீர்காழிக்கு இரவு 7.52 மணிக்கும், மயிலாடுதுறைக்கு 8.43 மணிக்கும், கும்பகோணத்திற்கு 9.18 மணிக்கும், தஞ்சைக்கு 10.13 மணிக்கும், இரவு 11.35 மணிக்கு திருச்சிக்கு செல்லும். இந்த ரயிலில் 12 இருக்கை பெட்டிகள், 6 படுக்கை பெட்டிகள் உள்பட மொத்தம் 20 பெட்டிகள் இணைக்கப்படுகிறது. எனவே இந்த ரயிலை பயணிகள் பயன்படுத்தி, கூட்ட நெரிசலின்றி பயணிக்கலாம் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்க தாம்பரம் – திருச்சி இடையே இன்டர்சிட்டி சிறப்பு ரயில்: டிசம்பர் 31ம் தேதி வரை வாரத்தில் 5 நாட்கள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Trichy ,Chennai ,
× RELATED தாம்பரம் மாநகராட்சியில் 102 சாலைப்பணிகள் நிறைவு