×

மனித சங்கிலி போராட்டத்தில் மோதல் அதிமுக நிர்வாகிகள் ஆபாச அர்ச்சனை: பெண்கள் காதை மூடி ஓட்டம்

சாத்தூர்: சாத்தூரில் நடந்த அதிமுக மனிதச்சங்கிலி போராட்டத்தில் நிர்வாகிகள் ஆபாசமாக பேசி மோதி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைப் பார்த்து போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் காதைப் பொத்திக் கொண்டு முகஞ்சுழித்து ஓட்டம் பிடித்தனர். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் முக்குராந்தால் பகுதியில் அதிமுகவினர் இன்று காலை மனிதசங்கிலி போராட்டம் நடத்தினர். கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக அம்மா பேரவை மாநில இணைச்செயலாளர் ராஜவர்மன் கலந்து கொண்டார். இதில் கலந்து கொள்ள பெண்கள் உள்பட ஏராளமானோர் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், சாத்தூர் ஒன்றிய அதிமுகவில் கோஷ்டி பூசல் இருந்து வருகிறது. இன்று நடந்த மனிதச்சங்கிலியில் ராஜவர்மன் அருகில் நிற்பதற்காக அதிமுக விவசாய அணி மாஜி இணைச் செயலாளர் அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்த ராமச்சந்திரன் வந்தார். அப்போது அங்கிருந்த சாத்தூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் சண்முகக்கனி ஏதோ சொல்ல, இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் இருவரும் பொதுஇடம், பெண்கள் இருக்கிறார்கள் என பார்க்காமல் ஆபாசமாக ஒருவரை, ஒருவர் திட்டி தீர்த்தனர். ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி மோதல் உருவாகும் சூழல் உருவானது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் விலக்கி விட்டனர். இருவரும் ஆபாசமாக பேசியதால், மனிதசங்கிலிக்கு அழைத்து வரப்பட்ட பெண்கள் முகம் சுழித்து காதுகளை பொத்தி கொண்டனர். மனிதசங்கிலி போராட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆபாசமாக பேசி மோதிக் கொண்டது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

The post மனித சங்கிலி போராட்டத்தில் மோதல் அதிமுக நிர்வாகிகள் ஆபாச அர்ச்சனை: பெண்கள் காதை மூடி ஓட்டம் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Chatur ,Virudhunagar district ,Chatur Mukurandhal ,
× RELATED சாத்தூர் அருகே மின்கம்பத்தை...