×

வாலாஜாபாத் பகுதியில் 500 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

 

வாலாஜாபாத், அக்.7: வாலாஜாபாத் பகுதியில் 500 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன. வாலாஜாபாத் பேரூராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்ட தூய்மை பணியாளர்கள், தனியார் பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவ, மாணவிகள் சார்பில் வாலாஜாபாத் பேரூராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டு பகுதியில் உள்ள அனைத்து தெருக்களிலும் முழு துப்புரவு முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு பேரூராட்சி மன்ற கவுன்சிலர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

இதில் பேரூராட்சிமன்ற தலைவர் இல்லாமல்லி ஸ்ரீதர் முகாமை தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து, நான்காவது வார்டு பகுதியில் உள்ள அனைத்து தெருக்களிலும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிப்பது, சாலையையொட்டி வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றுவது, சாலையின் இரு புறமும் உள்ள கால்வாய்களை தூர் வாருவது உள்ளிட்ட பல்வேறு தூய்மை பணிகளை செய்தனர்.

இதனைத்தொடர்ந்து, நான்காவது வார்டு பகுதியில் 500 கிலோவுக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர். மேலும், இங்குள்ள அனைத்து வீடுகளுக்கும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்கும் வகையில் குப்பை தொட்டிகள் வழங்கப்பட்டன. இந்த முகாமில், கல்லூரி பேராசிரியர் வெங்கடேசன் உட்பட கல்லூரி மாணவ, மாணவிகள் திடக்கழிவு மேலாண்மை திட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post வாலாஜாபாத் பகுதியில் 500 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Walajabad ,Wallajabad Municipality ,Wallajabad ,Management Program ,College National Welfare Project ,Dinakaran ,
× RELATED வாலாஜாபாத் பகுதிகளில் அதிக ஹாரன்...