திருமங்கலம் அருகே கண்மாயில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு

திருமங்கலம், அக். 5: திருமங்கலம் அருகே, கண்மாயில் மீன்பிடிக்க சென்ற 13 வயது சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்தார். திருமங்கலம் அருகேமேலஉப்பிலக்குண்டு கிராமத்தினை சேர்ந்தவர் பாலமுருகன்(35). கட்டிடத்தொழிலாளியான இவரது மனைவி விஜயராணி. இவர்களுக்கு மாலதி என்ற மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். சிறுமி மாலதி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் பாலமுருகன் அவரது மனைவி வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டனர். சிறுமி மாலதி தோழிகளுடன் உப்பிலிக்குண்டு கண்மாயில் மீன்பிடிக்க சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராவிதமாக கண்மாய் நீரீல் மூழ்கினார். நீச்சல் தெரியாத காரணத்தினால் அவர் அலறவே அக்கம்பக்கத்தினர் கண்மாயில் இறங்கி மாலதியை மீட்க முயன்றனர். அதற்குள் ஆழமான பகுதியில் மூழ்கிய சிறுமி மாலதி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை மீட்ட பொதுமக்கள், சம்பவம் குறித்து கூடக்கோவில் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாலதியின் உடலை கைப்பற்றி திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி விடுமுறையில் தோழிகளுடன் மீன்பிடிக்க சென்ற சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம், அந்த பகுதியில் சோகத்தினை ஏற்படுத்தியது.

The post திருமங்கலம் அருகே கண்மாயில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: