×

நடிகர் வடிவேலுவின் வெற்றிக்குப் பின்னால் நான்தான் இருந்தேன் : நடிகர் சிங்கமுத்து பதில்

சென்னை : நடிகர் வடிவேலுவின் வெற்றிக்குப் பின்னால் நான்தான் இருந்தேன் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் சிங்கமுத்து பதில் அளித்துள்ளார். யூடியூப் சேனல்களுக்கு நடிகர் சிங்கமுத்து அளித்த பேட்டியில் தன்னைப் பற்றி பொய்யான தகவல்களைக் கூறி தரக்குறைவாக பேசியுள்ளதாக குற்றம் சாட்டிய நடிகர் வடிவேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் சிங்கமுத்துவுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், ‘பொதுமக்கள் மத்தியில் தனக்குள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதற்காக ரூ. 5 கோடியை மான நஷ்டஈடாக வழங்க நடிகர் சிங்கமுத்துவுக்கு உத்தரவிட வேண்டும். தன்னைப் பற்றி அவதூறாக பேச சிங்கமுத்துவுக்கு தடை விதிக்க வேண்டும்’ எனவும் கோரியிருந்தார். இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, நடிகர் சிங்கமுத்து பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் நடிகர் சிங்கமுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அளித்த பதிலில்,”நடிகர் வடிவேலுவின் வெற்றிக்குப் பின்னால் நான் தான் இருந்தேன். நான் நடிப்பதை தடுக்கும் வகையில் என்னைப் பற்றி தயாரிப்பாளர்களிடம் தவறாக சித்தரித்தார். அவரைப் பற்றி பேட்டி அளிக்க தடை கேட்பதற்கு எந்த உரிமையும் அவருக்கு இல்லை.மன உனைச்சலை ஏற்படுத்த வேண்டும் என்ற உள் நோக்கத்தில் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. நடிகர் வடிவேலு சொத்து வாங்கியதில் எந்த நிதி இழப்பையும் எதிர்கொள்ளவில்லை. என்னை துன்புறுத்தும் நோக்கில் வழக்கை நடிகர் வடிவேலு தாக்கல் செய்துள்ளார்.நடிகர் வடிவேலு தொடர்ந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்,”இவ்வாறு தெரிவித்தார். இதையடுத்து, வழக்கின் விசாரணையை அக்.24ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.

The post நடிகர் வடிவேலுவின் வெற்றிக்குப் பின்னால் நான்தான் இருந்தேன் : நடிகர் சிங்கமுத்து பதில் appeared first on Dinakaran.

Tags : Vadivelu ,Singhamuthu ,Chennai ,Singamuthu ,Chennai High Court ,YouTube ,
× RELATED நடிகர் வடிவேலுவின் வெற்றிக்குப்...