×

ஆர்.கே.பேட்டை அருகே தனியார் பேருந்து மோதியதில் பள்ளி மாணவன் படுகாயம்: போலீசார் விசாரணை

ஆர்.கே.பேட்டை: திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை தாலுகா, வேலன் கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகன் குரு(13). அதே பகுதியில் அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று காலை மாணவன் குரு வீட்டிலிருந்து தனது சைக்கிளில் வேலன் கண்டிகை பேருந்து நிறுத்தம் அருகே சென்று ஜெராக்ஸ் எடுத்துக்கொண்டு, மீண்டும் வீட்டிற்கு சென்றுக்கொண்டிருந்தான். அப்போது ஆந்திரம் மாநிலம், சித்தூரில் இருந்து சோளிங்கர் வழியாக திருத்தணி நோக்கி சென்ற தனியார் பேருந்து, குருவின் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில், தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த மாணவன் குருவை, அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, குருவிற்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து வந்த ஆர்.கே.பேட்டை போலீசார், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

* ஓட்டுநர் அலட்சியத்தால் மாணவன் படுகாயம்
தனியார் பேருந்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருக்கும்போது, தனியார் பேருந்து ஓட்டுநர் செல்போன் பேசியபடி, பேருந்தினை இயக்கியதால்தான் சைக்கிளில் சென்ற மாணவன் மீது மோதி விபத்துக்குள்ளானது என்று பயணிகள் கூறுகின்றனர். எனவே, அலட்சியமாக பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

 

The post ஆர்.கே.பேட்டை அருகே தனியார் பேருந்து மோதியதில் பள்ளி மாணவன் படுகாயம்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : RK Pettah ,RK Pettai ,Dandapani ,Velan Kandigai village ,RK Pettai taluka, Thiruvallur district ,Guru ,
× RELATED ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் சாலையில்...