×

தமிழ்நாட்டில் 300 இடங்களில் சுற்றுலாவை மேம்படுத்த மாஸ்டர் பிளான்

ஊட்டி: நீலகிரி மாவட்டம், ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் இருந்து கேசினோ சந்திப்பு வரை சுற்றுலாத்துறை மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தூய்மையை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த பேரணியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன் துவக்கி வைத்தார். தொடர்ந்து, மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில் ஓட்டல் உரிமையாளர்கள் சார்பில் உணவு திருவிழா நடந்தது.
இதில், பல்வேறு ஓட்டல்களை சேர்ந்த உரிமையாளர்கள் பல்வேறு வகையான உணவு வகைகளை வைத்திருந்தனர். இதில் அமைச்சர் ராமசந்திரன், சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் உண்டு மகிழ்ந்தனர்.

பின்னர் அமைச்சர் ராமச்சந்திரன் கூறியதாவது: ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு முறையான வரவேற்பு அளிக்க வேண்டும். அவர்கள் தங்கி செல்வதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். இங்கு அளிக்கப்படும் வரவேற்பு மற்றும் வசதிகளை பார்த்து மேலும் 4 நாட்கள் தங்கிச் செல்ல நினைக்கும் அளவில் அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் 300 இடங்களில் சுற்றுலாவை மேம்படுத்த தமிழ்நாடு முதல்வர் மாஸ்டர் பிளான் ஒன்று தயாரித்து கொடுத்துள்ளார். அப்பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.

மலை சுற்றுலா, கிராமிய சுற்றுலா, மருத்துவ சுற்றுலா உள்ளிட்ட 12 வகையான சுற்றுலாவை அறிமுகம் செய்து சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறோம். 2030ல் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்த வேண்டும் என கூறியுள்ளார். இதில், சுற்றுலா தொழிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் வருவாயில், தற்போது 7 சதவீதம் வருவாய் சுற்றுலாத்துறை மூலம் கிடைத்து வருகிறது. இதனை மேலும், அதிகரிக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post தமிழ்நாட்டில் 300 இடங்களில் சுற்றுலாவை மேம்படுத்த மாஸ்டர் பிளான் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Ooty ,Nilgiri district ,Ooty Tribal Cultural Center ,Casino Junction ,Tourism Department ,Hotel Owners Association ,Tourism Minister ,Ramachandran ,
× RELATED விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில்...