போலி ஆவணம் மூலம் ரூ.2.10 கோடிக்கு 2 இடங்களை விற்ற மோசடி நபர் கைது

ஆவடி: போலி ஆவணம் தயாரித்து இரண்டு இடங்களை ரூ.2.10 கோடிக்கு விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டார். சென்னை, வேப்பேரி, ரித்தர்டன் சாலையைச் சேர்ந்தவர் ஷைலஜா(64). பூந்தமல்லி, வரதராஜபுரம், கே.வி.ஆர் நகரில் உள்ள பிளாட் 9, 10 ஆகிய மனைகள், அவரது தந்தை ரோசி நாயுடு பெயரில் இருந்தது. அவர், இறந்த பின் ஷைலஜா பெயரில் இருந்து வந்தது. இந்நிலையில், தனசேகர் என்பவர் ரோசி நாயுடு கையெழுத்தை போலியாக போட்டு, பவர் பத்திரம் தயார் செய்து நிலத்தை ஏமாற்றியது தெரிந்தது.

இதன் மதிப்பு ரூ.1.40 கோடி. ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம், முதலியார் தெருவைச் சேர்ந்தவர் சம்பத்(61). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர், தனது ஓய்வு மூலம் பெற்ற பணத்தை கொண்டு, மகளின் பெயரில் சொந்தமாக நிலம் வாங்க இடம் தேடினார்.  இதனை அறிந்த தனசேகர், பூந்தமல்லி, வரதராஜபுரம், கே.வி.ஆர் நகரில் உயர்நீதிமன்ற வழக்கறிஞருக்கு சொந்தமான 1980 சதுர அடி நிலத்தை, போலியான ஆவணங்கள் வாயிலாக ரூ.70.40 லட்சம் ரூபாய்க்கு சம்பத்திடம் விற்று ஏமாற்றியுள்ளார்.

இதுகுறித்து ஆவடி மத்திய குற்றப்பிரிவில், கடந்த ஆண்டு இருவரும் தனித்தனியாக புகார் அளித்தனர். புகாரின் படி விசாரித்த ஜெய்சங்கர், தலைமறைவாக இருந்த ஆவடி, கன்னிகாபுரம், கேம்ப் பகுதியைச் சேர்ந்த தனசேகர்(45), என்பவரை கைது செய்து விசாரித்தனர். இவ்விரு வழக்கில் சம்பந்தப்பட்ட தனசேகர் நில தரகராக இருந்த போது, கொளத்தூரைச் சேர்ந்த சரத் பாபு மற்றும் கோயம்பேட்டில் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் ராமகிருஷ்ணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

அப்போது, நீண்ட நாட்களாக எவ்வித பதிவும் இல்லாத மேற்கூறிய ரோசி நாயுடு மற்றும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆகியோர் நிலத்தை நோட்டமிட்டு, நண்பர்களுடன் போலியான ஆவணங்கள் வாயிலாக விற்று ஏமாற்றியது தெரிய வந்தது. இதையடுத்து தனசேகரை நேற்று முன்தினம் போலீசார் சிறையில் அடைத்தனர்.

The post போலி ஆவணம் மூலம் ரூ.2.10 கோடிக்கு 2 இடங்களை விற்ற மோசடி நபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: