ஊட்டி தாவரவியல் பூங்கா மாடங்களில் மலர் தொட்டிகளை கொண்டு அலங்காரம்

ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாம் சீசனுக்காக டேலியா, மேரி கோல்டு மற்றும் டெய்சி உட்பட பல்வேறு மலர் தொட்டிகளை கொண்டு மாடங்களில் மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வருகின்றனர். குறிப்பாக, கோடை காலத்தில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதனால், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் முதல் சீசன் கடை பிடிக்கப்படுகிறது. செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் 2ம் சீசன் கடை பிடிக்கப்படுகிறது. இரண்டாம் சீசன் இம்மாதம் துவங்கிய நிலையில், தற்போது தாவரவியல் பூங்காவில் மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. 15 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இத்தாலியன் பூங்காவிலும் மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள 2 லட்சம் மலர் செடிகளிலும் மலர்கள் பூத்துள்ளன. தற்போது பள்ளி காலாண்டு விடுமுறை, காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை விடுமுறை என தொடர் விடுமுறை வரும் நிலையில், ஊட்டியை சுற்றுலா பயணிகள் முற்றுகையிட வாய்ப்புள்ளது. இந்நிலையில் மலர் அலங்கார பணிகள் முடிந்தவுடன் சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், பராமரிப்பு பணி காரணமாக மூடப்பட்டிருந்த பெரிய புல் மைதானமும் அடுத்த வாரம் முதல் சுற்றுலா பயணிகள் செல்ல திறக்கப்பட்ட உள்ளது. எனவே, விடுமுறையை கொண்டாட ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் பூங்காவில் மலர் அலங்காரங்களையும், செடிகளில் பூத்து குலுங்கும் வண்ண வண்ண மலர்களையும் கண்டு ரசிக்கலாம்.

The post ஊட்டி தாவரவியல் பூங்கா மாடங்களில் மலர் தொட்டிகளை கொண்டு அலங்காரம் appeared first on Dinakaran.

Related Stories: