விழுப்புரம் அருகே பரபரப்பு பெண் கொடுக்க மறுத்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

விழுப்புரம், செப். 27: விழுப்புரம் அருகே பெண் கொடுக்க மறுத்ததால் வாலிபர் சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் பெண் வீடு, அவர்களது கடையை சூறையாடினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது. விழுப்புரம் அருகே மோட்சகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மகன் பிரதீப்(27). சென்னை சூளைமேட்டில் தங்கி பணியாற்றி வந்தார். இதனிடையே தனது சொந்த கிராமத்தில் உள்ள 23 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து பிரதீப் குடும்பத்தினர் பெண் வீட்டிற்கு சென்று பெண் கொடுக்குமாறு கேட்டுள்ளனர். ஆனால் அவரது பெற்றோர் இதற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் வேறொருவருடன் அந்த பெண்ணுக்கு திருமணம் நடத்தி வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பிரதீப், நேற்று முன்தினம் சென்னை சூளைமேட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சூளைமேடு போலீசார் அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரதீப் தற்கொலை செய்துகொண்ட தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் சிறுவந்தாடு – மடுகரை சாலையில் அமர்ந்து நேற்று காலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் பிரதீப் தற்கொலைக்கு பெண் வீட்டார் தான் காரணம். எனவே அந்த பெண், அவரது குடும்பத்தினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பெண் வீட்டாரின் கடை, வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடினர். இதனால் அங்கு பதற்றம் அதிகரித்த நிலையில் வளவனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பிரதீப் குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட பெண் வீட்டார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் பிரேத பரிசோதனை முடிந்து பிரதீப் உடல் வந்தாலும் அவரது உடலை நாங்கள் பெற்று அடக்கம் செய்ய மாட்டோம்.

பெண் வீட்டார் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டகாரர்களை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.  இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. மேலும் அங்கு அசம்பாவத்தை தடுக்கும் வகையில் இன்ஸ்பெக்டர் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து பிரதீப்பின் உறவினர்கள் அவரது உடலை பெற்றுக்கொண்டு அடக்கம் செய்தனர்.

வீட்டை சூறையாடிய 4 பேர் மீது வழக்கு பதிவு
இதனிடையே வீட்டை சூறையாடியதாக பெண்ணின் தந்தை வளவனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் வீட்டில் இருந்த பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மிக்ஸி, கிரைண்டர், எல்இடி டிவி உள்ளிட்ட ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை சேதப்படுத்தியதாகவும். ரூ.3.50 லட்சம் பணம், 6 பவுன் நகைகள் மாயமானதாகவும் அளித்த புகாரின் பேரில் அதே பகுதியைச் சேர்ந்த முருகன், ராமேஷ், ராஜாங்கம், நிஷாந்த் ஆகிய நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post விழுப்புரம் அருகே பரபரப்பு பெண் கொடுக்க மறுத்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: