தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி


சென்னை: சென்னை, கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக கூட்டரங்கில் மருத்துவத்தின் செயற்கை நுண்ணறிவு கருத்து கட்டுரை தொகுப்பு புத்தகத்தை (Concept Competitions collection of Articles) அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வெளியிட்டார். பிறகு தேர்ச்சி விகிதத்தில் முதன்மை தகுதி பெற்றுள்ள கல்வி நிறுவனங்கள், மருத்துவ ஆசிரியர்கள், முதுநிலை மற்றும் இளநிலை பட்டதாரிகளுக்கு சிறந்த ஆராய்ச்சியாளர்களுக்கான சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் சார்பில் கடந்த ஆண்டு ஆராய்ச்சி தினம் நடத்த வேண்டும் என்று முடிவெடுத்து, 2வது ஆராய்ச்சி தினமாக நடத்தி முடிக்கப்பட்டது.

இந்த ஆராய்ச்சி தினத்தை பொறுத்தவரை மாணவர்கள், மருத்துவர்கள், மருத்துவ வல்லுநர்கள் என்று இளநிலை மருத்துவர்கள், முதுநிலை மருத்துவர்கள், மருத்துவக்கல்வி மாணவர்கள் என்று அனைத்து தரப்பினரும் இந்த ஆண்டு 1500 கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளனர்.மருத்துவத்தில் ஏஐ (Artificial intelligence) என்று சொல்லக்கூடிய சேர்க்கை மருத்துவம் என்கிற தலைப்பில் பல்வேறு மாணவர்கள் தங்களது படைப்புகளை தந்திருக்கிறார்கள். செயற்கை நுண்ணறிவு உலகளவில் மருத்துவத்துறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்களின் உடல்நலனை காப்பதில் செயற்கை நுண்ணறிவு பங்கு அளப்பரியதாக இருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்காக பெரும் சாத்தியக்கூறுகளை செயற்கை நுண்ணறிவு கொண்டிருக்கிறது.

நோய்களை கண்டறிதல், அதிலிருந்து தனிப்பட்ட சிகிச்சை திட்டங்கள், ரோபோடிக் அறுவை சிகிச்சை வரை ஏற்கனவே பல முக்கிய தாக்கங்களை செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. மருத்துவ ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த பல்கலைக்கழகத்தின் சார்பில் ஏற்கனவே ஆண்டொன்றிற்கு ரூ.10,00,000 வரை உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆண்டு ரூ.10 லட்சம் என்பதை ரூ.1 கோடியாக உயர்த்தி அறிவிக்கப்பட்டிருக்கிறது. பருவநிலை மாற்றங்கள் குறிப்பாக காலநிலை மாற்றம், மனித குலத்திற்கு ஏற்படுத்துகின்ற விளைவுகளை எதிர்கொள்ளுதல் பற்றியும் இந்த ஆராய்ச்சிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. இதுபோன்ற விஷயங்களுக்கான ஆராய்ச்சி தினம் அனுசரிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

The post தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: