×

பெயின்ட் குடோனில் பயங்கர தீவிபத்து

கூடுவாஞ்சேரி, செப்.26: வண்டலூர் அருகே கொளப்பாக்கத்தில் பெயிண்ட் குடோனில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டதில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகின. செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அருகே கொளப்பாக்கத்தில் அடுத்தடுத்து 2 பெட்ரோல் பங்க்குகள் உள்ளன. இதன் மத்தியில் பெயிண்ட் குடோன் உள்ளது. இதில், பிளாஸ்டிக் டிரம், பஞ்சு, பெயிண்ட் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளன. இந்நிலையில், பெயிண்ட் குடோனில் நேற்று காலை 11:30 மணியளவில் திடீரென தீ பற்றி எரிய தொடங்கியது. இதனைக்கண்டதும் அப்பகுதி மக்கள் மறைமலை நகரில் உள்ள தீயணைப்பு துறையினருக்கும், ஓட்டேரி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் ஓட்டேரி போலீசார் மற்றும் மறைமலை நகர் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர், தண்ணீரை பீய்ச்சியடித்தனர். ஆனாலும், தீ கட்டுக்கடங்காமல் மளமளவென எரிய தொடங்கியது. பின்னர், தீயணைப்புத்துறையினர் 1 மணி நேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், அருகருகே உள்ள பெட்ரோல் பங்க்குகளிலும் தீ பரவாமல் இருப்பதற்காக தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். மேலும், வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையின் இரு புறங்களிலும் வாகனங்கள் செல்லாத வகையில் தடுத்து நிறுத்தப்பட்டன. இதனால், சாலையின் இடப்புறம் 10 கிலோமீட்டர் தொலைவிற்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது. பெயிண்ட் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகின. இந்த தீவிபத்தால் அப்பகுதியில் 2 மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post பெயின்ட் குடோனில் பயங்கர தீவிபத்து appeared first on Dinakaran.

Tags :
× RELATED மாமல்லபுரம் அருகே நல்லாண்பிள்ளை...