×

OTT-யிலும் தணிக்கை தொடர்பான வழக்கு.. ஒன்றிய அரசு பதில் அளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு!!

மதுரை : OTT தளத்தில் சினிமா, வெப் சீரியல்கள், தொடர்கள் போன்றவற்றை ஒழுங்குபடுத்தி தணிக்கை செய்து வெளியிட உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது பல்லாயிர ஆயிரம் கோடி நபர்கள் தினமும் இணையத்தை பயன்படுத்துகின்றனர். இந்திய சினிமா நாளுக்கு நாள் உலக தரத்தை நோக்கி பயணித்து வருகிறது. அதே நேரத்தில் எந்த மொழி திரைப்படங்களாக இருந்தாலும் அவை முழுமையாக சென்சார் போர்டால் தணிக்கை செய்யப்பட்ட பிறகு மக்கள் காண கிடைக்கிறது. அதே நேரத்தில் தொலைக்காட்சி தொடர்கள், நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் அதிக அளவில் ஆபாச கண்டண்டுகளை கொண்டிருப்பதாக புகார் எழுந்திருக்கிறது.

இந்நிலையில், ஓடிடி தளத்தில் வெளியாகும் சினிமா, வெப் சீரியல்கள், தொடர்கள் போன்றவற்றை ஒழுங்குபடுத்தி தணிக்கை செய்து வெளியிட உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த ஆதிசிவம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், இந்திய திரைப்பட தணிக்கை வாரியம், ஒழுக்கம், அறம் மற்றும் கலாச்சாரத்தை மீறும் வகையிலான காட்சிகள், வசனங்கள் இருப்பின் அவற்றை திரைப்பட தணிக்கை சட்டத்தின் கீழ் தணிக்கை செய்து வெளியிடும்.

OTT தளத்தில் ஒளிபரப்பப்படும் சினிமா, வெப் சீரியல்கள், தொடர்கள் ஆகியவற்றில் வன்முறை, போதைப்பொருள் பயன்பாடு, ஆபாச பேச்சுக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றக் காட்சிகள், பிரிவினைவாத காட்சிகள், தேசவிரோத கருத்துக்கள் போன்றவை எவ்விதமான தணிக்கையும் இன்றி ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. கடந்த 2018ம் ஆண்டில் 2.4 பில்லியன் நபர்கள் OTT தளத்தை பயன்படுத்திய நிலையில், 2027ம் ஆண்டில் அது 4.2 பில்லியன் ஆக உயரும் என தரவுகள் குறிப்பிடுகின்றன. OTT தளத்தில் வெளியாகும் நிகழ்ச்சிகளால் இளம் தலைமுறையினர் உடல்ரீதியாகவும், உளவியல்ரீதியாகவும் பல பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.

இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே OTT தளத்தில் வெளியாகும் சினிமா, வெப் சீரியல்கள், தொடர்கள் போன்றவற்றை தணிக்கை செய்து ஒழுங்குபடுத்த உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு, வழக்கு தொடர்பாக மத்திய உள்துறை செயலர், மத்திய தொலைதொடர்பு துறை செயலர், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

The post OTT-யிலும் தணிக்கை தொடர்பான வழக்கு.. ஒன்றிய அரசு பதில் அளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு!! appeared first on Dinakaran.

Tags : EU Government ,iCourt ,Madurai ,iCourt Branch ,Dinakaran ,
× RELATED கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு...