திடீர் கட்டண உயர்வை கண்டித்து தனியார் பள்ளியை பெற்றோர் முற்றுகை: மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

ஆலந்தூர்,: திடீர் கட்டண உயர்வை கண்டித்து தனியார் பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் மடிப்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மடிப்பாக்கம், மேடவாக்கம் மெயின் ரோட்டில் பிரபல தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு எல்கேஜி முதல் 12ம் வகுப்பு வரை ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை உயர்த்தி உள்ளதாக பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.

குறிப்பாக, 1ம் வகுப்புக்கு ரூ.4 ஆயிரமாக இருந்த கட்டணம் ரூ.9,500 எனவும், 5ம் வகுப்புக்கு ரூ.4,500 என இருந்த கட்டணத்தை ரூ.11,500 எனவும், 10ம் வகுப்புக்கு ரூ.6 ஆயிரமாக இருந்த கட்டணத்தை ரூ.11 ஆயிரம் எனவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதையறிந்த மாணவர்களின் பெற்றோர் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, உயர்த்தப்பட்ட கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என்று பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் எந்த பலனும் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர், நேற்று காலை பள்ளி முன்பு குவிந்தனர். திடீரென பள்ளியை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். பின்னர், பள்ளி முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் மேடவாக்கம் – பரங்கிமலை சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து மடிப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்ட பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பள்ளி நிர்வாகத்தினரும் வரவழைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது, பழைய கட்டண முறைகளை வசூலிக்க அறிவிப்பு செய்யப்படும். புதிய கட்டண முறை திரும்ப பெறப்படும் என பள்ளி நிர்வாகம் சார்பில் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து மறியல் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post திடீர் கட்டண உயர்வை கண்டித்து தனியார் பள்ளியை பெற்றோர் முற்றுகை: மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: