×

மாமல்லபுரத்தில் 5வது நாளாக சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில், கடந்த 4 நாட்களாக இசிஆர் சாலை, கோவளம் சாலை, கிழக்கு ராஜ வீதி, கடற்கரை சாலை, பழைய சிற்பக் கல்லூரி சாலை, கலங்கரை விளக்க சாலை உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்தது. இந்த நிலையில், நேற்று 5வது நாளாக பலத்த போலீஸ் பாதுகாப்போடு திருக்கழுக்குன்றம் சாலை, மேற்கு ராஜவீதி, பாடசாலை தெருவில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் பணி நடந்தது. இதில், பேரூராட்சி ஊழியர்கள் வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் 50க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து, மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகுமார், திருக்கழுக்குன்றம் துணை தாசில்தார் சீனிவாசன், மாமல்லபுரம் வருவாய் ஆய்வாளர் புஷ்பராஜ், டிராபிக் இன்ஸ்பெக்டர் செல்வம், சாலை ஆய்வாளர் சங்கர், துப்புரவு ஆய்வாளர் ரகுபதி, விஏஓ தினேஷ் ஆகியோர் முன்னிலையில், சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட பேனர்கள், பெட்டி கடை, தள்ளு வண்டி கடை, கூல்டிரிங்ஸ் விற்பனை கடை, தொப்பி கடை, ஐஸ்கிரீம் கடைகளை அதிரடியாக அப்புறப்படுத்தினர். மேலும், கடைக்காரர்கள் மீண்டும் சாலையை ஆக்கிரமிக்காத வகையில், பேரூராட்சி ஊழியர்கள் சாலையோரத்தில் கயிறு போட்டு ஆணி அடித்தனர். தொடர்ந்து, 6வது நாளாக இன்று காலை மீண்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post மாமல்லபுரத்தில் 5வது நாளாக சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,ECR Road ,Kovalam Road ,East Raja Road ,Beach Road ,Old Sculpture College Road ,Lighthouse Road ,
× RELATED பைக் மீது கார் மோதியதில் இருவர் பலி