பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நள்ளிரவில் கைக்குழந்தையுடன் வந்தும் சிகிச்சை அளிக்காத செவிலியர்

*உறவினர்களுடன் சென்று வாக்குவாதத்தால் பரபரப்பு

பொன்னை : பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கைக்குழந்தையுடன் சிகிச்சைக்கு சென்ற தாயை வெளியே தள்ளிய செவிலியரை கண்டித்து கை குழந்தையுடன் தாய் உறவினர்களுடன் வாக்குவாதம் செய்தனர். அவர்களிடம் போலீசார் சமரசம் செய்து வைத்தனர்.வேலூர் மாவட்டம் பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் மூன்று மாத கைக்குழுந்தயுடன் தாய் சிகிச்சைக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு பணியில் இருந்த செவிலியர்கள், டாக்டர் வெளியே சென்றுள்ளார். இப்போது சிகிச்சை அளிக்க முடியாது என கூறியதாக கூறப்படுகின்றது. அப்போது குழந்தையின் தாய் மற்றும் தந்தை இருவரும் குழந்தைக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், உடனே சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் செவிலியரிடம் கூறியுள்ளனர்.

மழை பெய்வதாகவும் தாங்கள் வேறு மருத்துவமனைக்கு செல்ல முடியவில்லை எனவும் கூறியுள்ளனர். அப்போது செவிலியர் கதவை பூட்டிவிட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து குழந்தையை வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வீடு திரும்பியுள்ளனர். இதனை கண்டித்து நேற்று கைக்குழந்தையுடன் தாய் உறவினர்களுடன் சென்று பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது, அங்கு பணியில் இருந்த டாக்டரின் உறவினருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், மருத்துவர் அன்று வீட்டிற்கு சென்று விட்டதாகவும் இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக் கொள்வதாகவும் கூறி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர்கள் கலைந்து போக மறுத்து கை குழந்தையுடன் தாய் மற்றும் உறவினர்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து தகவலறிந்து அங்கு வந்த பொன்னை காவல்நிலைய தலைமை காவலர் சுரேஷ், காவலர் நிஜார் உள்ளிட்ட போலீசார் கை குழந்தையுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட பெண் மற்றும் உறவினர்களிடம் இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக கூறி சமரசம் செய்தனர். இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

The post பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நள்ளிரவில் கைக்குழந்தையுடன் வந்தும் சிகிச்சை அளிக்காத செவிலியர் appeared first on Dinakaran.

Related Stories: