×

பாலியல் வழக்கில் ஜாமின் கோரி மலையாள நடிகர் சித்திக் தாக்கல் செய்த முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது கேரளா ஐகோர்ட்

திருவனந்தபுரம்: பாலியல் வழக்கில் ஜாமின் கோரி, மலையாள நடிகர் சித்திக் தாக்கல் செய்த முன் ஜாமின் மனுவை கேரளா ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்துள்ளார். மலையாள திரையுலகில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டியின் அறிக்கை சமீபத்தில் வெளியானது. அதில், பட வாய்ப்புகளுக்காக பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாகவும், பெரிய நடிகர்கள் கூட இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கைக்கு பின், பல நடிகையர் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல் குறித்து வெளிப்படையாக பேசத் துவங்கினர். பிரபல மலையாளர் நடிகர் சித்திக் 2016ல் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக நடிகை ஒருவர் போலீசில் புகார் அளித்தார். புகாரை பெற்ற போலீசார், நடிகர் சித்திக்கிற்கு எதிராக பலாத்கார வழக்கு பதிவு செய்தனர். மலையாள திரையுலகில் பெண்கள் அளித்த புகார்கள் தொடர்பாக இதுவரை 23 வழக்குகளை எஸ்ஐடி பதிவு செய்துள்ளது.

23 வழக்குகளில், சித்திக் மீதான வழக்கில் அதிகபட்ச ஆதாரங்களை போலீசார் மீட்டுள்ளதாக தெரிகிறது. ஹோட்டலில் நடந்த சாட்சிய சேகரிப்பில், சித்திக் மற்றும் புகார்தாரரும் ஒரே காலகட்டத்தில் ஹோட்டலில் தங்கியிருந்ததை போலீசார் உறுதிப்படுத்தினர். இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி, சித்திக் கேரளா ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், நடிகர் சித்திக்கிற்கு முன் ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்தனர். இந்த உத்தரவை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.

The post பாலியல் வழக்கில் ஜாமின் கோரி மலையாள நடிகர் சித்திக் தாக்கல் செய்த முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது கேரளா ஐகோர்ட் appeared first on Dinakaran.

Tags : Kerala Icourt ,Jamin ,Jamin Kori ,Siddiq ,Thiruvananthapuram ,Supreme Court ,Siddik ,
× RELATED நடிகைகளுக்கு பாலியல் தொல்லை...