×

ஆந்திராவுக்கு ரயில் மூலம் கடத்த முயன்ற 1413 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

பொன்னேரி: பொன்னேரி மற்றும் மீஞ்சூர் ரயில் நிலையங்களில் இருந்து ஆந்திராவுக்கு ரயில்களில் ரேஷன் அரிசி கடத்தி செல்லப்படுவதாக நேற்று மாலை பொன்னேரி வட்ட வழங்கல் அதிகாரி ஜவஹருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, வட்ட வழங்கல் துறை ஊழியர்களுடன் சம்பவ இடங்களுக்கு அதிகாரி ஜவஹர் விரைந்து சென்றார்.

அங்கு, ஆந்திராவுக்கு செல்லும் ரயில்களில் கடத்தி செல்வதற்கு, நடைமேடை பகுதியில் சுமார் 1413 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் தயார்நிலையில் இருப்பதை பார்த்து வட்ட வழங்கல் துறை ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்த அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து, அவற்றை பஞ்செட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இதைத் தொடர்ந்து பொன்னேரி, மீஞ்சூர் காவல் நிலையங்கள் மற்றும் கொருக்குப்பேட்டை, கும்மிடிப்பூண்டி ரயில்வே போலீசாரிடம் வருவாய்துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின்பேரில் ரயில்களில் ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்தி செல்லும் கும்பல் யார், எந்த ஊரை சேர்ந்தவர்கள் என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

The post ஆந்திராவுக்கு ரயில் மூலம் கடத்த முயன்ற 1413 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,BONNERI ,BONNERI CIRCULAR ,JAWAHAR ,MEENJOOR ,ANDRA ,Dinakaran ,
× RELATED பன்றி, மாட்டு கொழுப்பு, மீன் எண்ணெய்...