மாதவரத்தில் இருந்து உல்லாசத்துக்கு அழைத்து வந்தபோது தகராறு இளம்பெண்ணை கொன்று சூட்கேசில் அடைத்த சைக்கோ இன்ஜினியர்: துண்டு துண்டாக வெட்டி கொடூரம்; போலீஸ் அதிகாரி வீட்டு முன் வீச்சு; சென்னை துரைப்பாக்கத்தில் பயங்கரம்

சென்னை: துரைப்பாக்கத்தில் பாலியலுக்கு அழைத்து வந்த இடத்தில் ஏற்பட்ட தகராறில் இளம்பெண்ணை தலையில் சுத்தியால் அடித்து கொன்று, உடலை துண்டு துண்டாக கூறுபோட்டு சூட்கேசில் அடைத்து, உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் புதிதாக கட்டி வரும் வீட்டின் முன்பு வீசி சென்ற சைக்கோ இன்ஜினியரை போலீசார் கைது செய்தனர். சென்னை துரைப்பாக்கம் குமரன் குடில் 1வது பிரதான சாலை, 3வது குறுக்கு தெரு சந்திப்பில் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். வழக்கம்போல் கட்டுமான பணி மேற்கொள்ள நேற்று காலை வந்த மாரி என்பவர், கட்டிடத்தின் அருகே சூட்கேஸ் ஒன்று ஈக்கள் மொத்தபடி கிடப்பதை பார்த்துள்ளார்.

அதன் அருகே சென்று பார்த்த போது, ரத்தம் வடிந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அந்த நேரத்தில், அவ்வழியாக துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றும் முதல் நிலை காவலர் பொன்னுசாமி பைக்கில் சென்றுள்ளார்.
இதை பார்த்த கட்டுமான பணியாளர் மாரி, ‘சார் கொஞ்சம் நில்லுங்கள்…… இங்கே சூட்கேஸ் ஒன்றில் ரத்தம் வருகிறது’’ என்று கூறியுள்ளார்’. அதை கேட்ட ஏட்டு பொன்னுசாமி அந்த சூட்கேஸ் அருகே சென்று ஒருவித பதற்றத்துடன் திறந்து பார்த்தபோது, இளம்பெண் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு உடலை மடக்கி சூட்கேசில் திணித்து வைக்கப்பட்டிருந்ததை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். உயர் அதிகாரியின் கட்டுமான பணி நடைபெறும் வீடு என்பதால் உடனே இணை கமிஷனர் சி.பி.சக்கரவர்த்தி, அடையாறு துணை கமிஷனர் பொன் கார்த்திக் குமார், துரைப்பாக்கம் இன்ஸ்பெக்டர் பிரபு ஆகியோர் வந்து விசாரித்தனர். பிறகு சூட்கேசில் உள்ள உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், மருத்துவமனையில் வைக்கப்பட்ட உடலை துரைப்பாக்கம் கிராம நிர்வாகி இளங்கோ மற்றும் அவரது உதவியாளர் சுகுமார் பார்வையிட்டனர்.

தொடர்ந்து, உயர் போலீஸ் அதிகாரியின் கட்டுமான பணி நடந்து வரும் இடத்தின் அருகே உள்ள சிசிடிவி பதிவுகள் மற்றும் செல்போன் சிக்னல்களை வைத்து விசாரணை நடத்திய போது, வாலிபர் ஒருவர் சூட்கேசை நேற்று அதிகாலை 3 மணிக்கு கொண்டு வந்து வீசிவிட்டு செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. சிசிடிவி பதிவில் உள்ள வாலிபரின் புகைப்படத்தை வைத்து விசாரித்தபோது, துரைப்பாக்கம் பார்த்தசாரதி நகர், குடில் 1வது பிரதான சாலையில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தி, அங்கு இருந்த மணிகண்டன் (26) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, மணிகண்டன் இளம்பெண்ணை பாலியலுக்கு அழைத்து வந்து உல்லாசமாக இருந்த போது ஏற்பட்ட தகராறில் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

இதை தொடர்ந்து, மணிகண்டன் மீது கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். மேலும், இளம் பெண்ணை கொலை செய்ய பயன்படுத்திய சுத்தியை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மணிகண்டன் விசாரணையின் போது அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (26), இவர், பி.இ.மெக்கானிக் இன்ஜினியரிங் படித்துள்ளார. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தனது தாயுடன் துரைப்பாக்கத்தில் அக்கா வீட்டில் தங்கியிருந்து, பெருங்குடியில் உள்ள ஒரு கார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.

கடந்த 16ம் தேதி அக்கா குடும்பத்துடன் தாயும் திருவையாறு பகுதிக்கு உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிக்காக சென்றுள்ளார். இதனால், வீட்டில் மணிகண்டன் தனியாக இருந்துள்ளார். இவர், அடிக்கடி பாலியல் புரோக்கர்கள் மூலம் இளம்பெண்களை அழைத்து உல்லாசமாக இருப்பது வழக்கம். தனது அக்கா வீட்டில் யாரும் இல்லாதால், பாலியல் புரோக்கர் ஒருவர் மூலம், ஒரு நாளைக்கு ரூ.18 ஆயிரம் என பேசி மாதவரம் பொன்னியம்மன் மேடு பகுதியை சேர்ந்த திருமணம் ஆகாத தீபா (30) என்பவரை, துரைப்பாக்கத்தில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு கடந்த 17ம் தேதி (செவ்வாய்க்கிழமை) அழைத்து வந்துள்ளார். இருவரும் மது குடித்துவிட்டு அங்கு உல்லாசமாக இருந்துள்ளனர். பிறகு நேற்று முன்தினம் அதிகாலை 2.30 மணிக்கு தீபா, எனது வீட்டில் இருந்து வெளியேறி இன்றுடன் 3 நாட்கள் ஆகிறது.

இதனால் நான் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கூறி மணிகண்டனிடம் பேரம் பேசியபடி தனக்கு தரவேண்டிய ரூ.18 ஆயிரம் பணத்தை கொடுத்தால் சென்றுவிடுவேன் என்று கூறியுள்ளார். அதற்கு மணிகண்டன், பேசிய பணத்தை தீபாவுக்கு கொடுக்காமல் ரூ.6 ஆயிரம் கழித்து கொண்டு ரூ.12 ஆயிரம் மட்டும் கொடுத்துள்ளார். இதனால் தீபாவுக்கும் மணிகண்டனுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. போதையில் இருந்த மணிகண்டன் ‘உனது அழகுக்கு ரூ.12 ஆயிரமே அதிகம்….. வேண்டாம் என்றால் அதையும் கொடுத்துவிடு…. என்று கூறி ரூ.12 ஆயிரத்தையும் பறித்துள்ளார். இதனால் தீபாவுக்கும், மணிகண்டனுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் மணிகண்டன் வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து தீபாவின் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.

இதில் மண்டை உடைந்து சம்பவ இடத்திலேயே தீபா ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து இறந்துள்ளார். ஆனாலும், எந்த பதற்றமும் இல்லாமல் மணிகண்டன் தீபாவின் உடலுடன் படுக்கை அறையிலேயே அன்று இரவு முழுவதும் இருந்துள்ளார். அப்போது, உடலை எப்படி வெளியே கொண்டு செல்வது என்று யோசித்துள்ளார். பிறகு நேற்று முன்தினம் காலையில் துரைப்பாக்கம் பகுதியில் உள்ள ‘பல்லவன் குடியிருப்பில்’ ரூ.3 ஆயிரத்திற்கு 3 அடி உயரம் உள்ள சூட்கேஷை விலைக்கு வாங்கியுள்ளார். அதை வீட்டிற்கு எடுத்து சென்று, கொலை செய்யப்பட்ட தீபாவின் இடுப்பு மற்றும் கால் எலும்புகளை தனியாக வெட்டி கூறுபோட்டு, சூட்கேசில் அடைத்துள்ளார்.

நேற்று அதிகாலை யாருக்கும் தெரியாமல் தனது அக்கா வீட்டில் இருந்து 2 தெரு தள்ளி உள்ள புதிதாக கட்டுமான பணிகள் நடந்து வரும் உயர் போலீஸ் அதிகாரிகளின் வீட்டின் முன் வீசி விட்டு சென்றுவிட்டார். ஆனால் உடல் வீசிய பகுதியில் சிசிடிவி கேமரா இருந்ததை கவனிக்காததால் போலீசாரிடம் சிக்கிக் கொண்டார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். அதேநேரம் கொலை செய்யப்பட்ட தீபா அவரது வீட்டிற்கு தெரியாமல் அடிக்கடி பாலியல் தரகர்கள் உதவியுடன் பாலியலுக்கு சென்று வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

* தீபாவின் மூளையை வறுத்து சாப்பிட்ட கொலையாளி
தீபாவை கொலை செய்த மணிகண்டன், அதிர்ச்சி தகவலை போலீசாரிடம் கூறியுள்ளார். அதாவது, பாலியலுக்கு அழைத்து வந்த தீபாவை கொலை செய்த பிறகு அவரது மூளையை தனியாக எடுத்து கடாயில் போட்டு வெங்காயம், தக்காளி, கடுகு, சீரகம் உள்ளிட்டவை போட்டு வறுத்து சமைத்து ருசித்து சாப்பிட்டதாக திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார். செக்ஸ் விஷயத்தில் மணிகண்டன் ஒரு சைக்கோ போல் நடந்துள்ளார். எனவே, இதுபோல் மணிகண்டன் வேறு ஏதேனும் பெண்களை கொலை செய்துள்ளாரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

* குடும்பத்தினர் அதிர்ச்சி
சொந்த ஊருக்கு சென்ற அக்கா மற்றும் தாய் குடும்பத்துடன் வீட்டுக்கு திரும்பி வந்தபோது வீட்டில் மணிகண்டன் படுத்துக் கிடந்துள்ளார். ஏன் வேலைக்கு செல்லாமல் படுத்து கிடக்கிறாய் என கேட்டுள்ளனர். அதற்கு தலைவலி என தெரிவித்துள்ளார். பிறகு தாய் தயார் செய்த உப்புமாவை குடும்பத்தினருடன் சேர்ந்து சாப்பிட்டுள்ளார். போலீசார் வந்து மணிகண்டனை கைது செய்த பிறகுதான் கொலை சம்பவத்தில் ஈடுபட்டதை கேட்டு அவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

The post மாதவரத்தில் இருந்து உல்லாசத்துக்கு அழைத்து வந்தபோது தகராறு இளம்பெண்ணை கொன்று சூட்கேசில் அடைத்த சைக்கோ இன்ஜினியர்: துண்டு துண்டாக வெட்டி கொடூரம்; போலீஸ் அதிகாரி வீட்டு முன் வீச்சு; சென்னை துரைப்பாக்கத்தில் பயங்கரம் appeared first on Dinakaran.

Related Stories: