×

குமரியில் திருவோண பண்டிகை கோலாகலம்: வீடுகளில் அத்தப்பூக்களம் அமைத்து உற்சாகம்

நாகர்கோவில்: வீடுகளில் அத்தப்பூக்களம் அமைத்து குமரி மாவட்டத்தில் திருவோண பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. மலையாள மொழி பேசும் கேரள மக்களின் விழாவான திருவோணம் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. மகாபலி மன்னர் மக்களை காண வருகின்ற நிகழ்வாக ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ‘அத்தம் பத்தினு பொன்னோணம்’ என்ற பழமொழிக்கு ஏற்ப ஆவணி மாதம் அத்தம் நட்சத்திர தினத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் தொடங்கி 10ம் நாளான திருவோண நட்சத்திர தினமான இன்று திருவோண பண்டிகை கொண்டாடப்படுகிறது.

குமரி மாவட்டத்திலும் திருவோண பண்டிகை கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. பள்ளி, கல்லூரிகளில் கடந்த சில நாட்களாகவே திருவோண விழாக்கள் நடைபெற்று வந்தது. இதில் மாணவ-மாணவிகள் பங்கேற்று அத்தப்பூக்களம் அமைத்தும், விளையாட்டு போட்டிகள் நடத்தியும், வண்ண வண்ண ஆடைகள் அணிந்தும் கொண்டாடினர். திருவோண பண்டிகையை முன்னிட்டு இன்று காலையில் மக்கள் கேரள பாரம்பரிய புத்தாடை அணிந்து, கோயில்களுக்கு சென்று பிரார்த்தனை செய்தனர். வீடுகளில் அத்தப்பூக்களங்கள் அமைத்து மகிழ்ந்தனர். உறவினர்கள் நண்பர்களை அழைத்து ‘ஓண சத்யா’ எனப்படும் அறுசுவை உணவு சமைத்து விருந்து படைத்து மகிழ்ந்தனர். ஓண சத்யாவில் அவியல், கிச்சடி, பச்சடி, இஞ்சி, துவரன் உள்ளிட்ட கறி வகைகளும், அடைபிரதமன் உள்ளிட்ட பாயச வகைகளும் இடம்பெற்றிருந்தன.

குமரி மாவட்டத்தில் குறிப்பாக விளவங்கோடு, கல்குளம் ஆகிய தாலுகாக்களில் ஓணப்பண்டிகை கொண்டாட்டங்கள் களை கட்டி இருந்தது. இங்குள்ள குழித்துறை, குலசேகரம், அருமனை, களியக்காவிளை, திற்பரப்பு, தக்கலை, பத்மநாபபுரம் பகுதிகளில் ஓண பண்டிகை கொண்டாட்டங்கள் பல்வேறு அமைப்புகள் சார்பில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மகாபலி மன்னர் வேடம் அணிந்தவர் முன்செல்ல கலாச்சார ஊர்வல நிகழ்வுகளும் நடைபெற்றன. இதில் இளைஞர்கள் புலி வேடமணிந்தும், உறியடி, எறிபந்து, கிளியாந்தட்டு உள்ளிட்ட விளையாட்டுகளிலும் ஈடுபட்டனர். வீடுகளில் ஓண ஊஞ்சல்கள் அமைக்கப்பட்டு பெண்களும், சிறுவர் சிறுமிகள் ஓண ஊஞ்சல் ஆடி மகிழ்ந்தனர். நாகர்கோவிலில் வடசேரி, கிருஷ்ணன்கோயில், வடிவீஸ்வரம், பார்வதிபுரம், கோட்டாறு உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் அத்தப்பூக்களங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

திருவோண பண்டிகையை முன்னிட்டு மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் இன்று காலை முதல் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், வேளிமலை குமாரகோயில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில், கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில், நாகர்கோவில் நாகராஜா கோயில் உள்ளிட்ட இடங்களில் காலை முதல் பக்தர்கள் திரண்டு வழிபாடு நடத்தினர். இதே போல் கோவை மாவட்டத்திலும் ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

The post குமரியில் திருவோண பண்டிகை கோலாகலம்: வீடுகளில் அத்தப்பூக்களம் அமைத்து உற்சாகம் appeared first on Dinakaran.

Tags : Thiruvanna festival ,Kumari ,Athapookalams ,Nagercoil ,Tiruvona ,Kumari district ,Attapukalam ,Thiruvonam ,Kerala ,Onam festival ,King Mahabali ,Thiruvona ,Athapookalam ,
× RELATED குமரி மாவட்டத்தில் திருவோண பண்டிகை உற்சாக கொண்டாட்டம்