×

சிபிஐ போல் நடித்து காங்.எம்.எல்.ஏ.விடம் ரூ.50 லட்சம் பணம் பறிக்க முயற்சி: கேரளாவில் பரபரப்பு

திருவனந்தபுரம்: டெல்லியில் மகளை போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்துள்ளதாக கூறி சிபிஐ அதிகாரி போல நடித்து கேரள காங்கிரஸ் எம்எல்ஏ அன்வர் சாதத்தை மிரட்டி பணம் பறிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக சிபிஐ என்று கூறி மிரட்டி வட மாநிலத்தை சேர்ந்த ஒரு கும்பல் பலரிடம் லட்சக்கணக்கில் பணம் பறிக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இந்த கும்பல் வீடியோ காலில் அழைத்து, உங்களுக்கு வந்த ஒரு பார்சலில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டுமென்றால் நாங்கள் கூறும் வங்கிக் கணக்கில் லட்சக்கணக்கில் பணம் அனுப்ப வேண்டும் என்று கூறி மிரட்டுவார்கள்.

பலரும் பயந்து அவர்கள் கூறும் வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்பி வைத்த சம்பவங்கள் நடந்துள்ளன. கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இந்தக் கும்பலின் மோசடிக்கு இரையாகி உள்ளனர். எர்ணாகுளத்தை சேர்ந்த ஒருவர் இதேபோல மோசடிக் கும்பலிடம் சமீபத்தில் ரூ.30 லட்சம் பணம் கொடுத்து ஏமாந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம் போலீசார், மோசடிக் கும்பலை சேர்ந்த பீகார் வாலிபரான பிரின்ஸ் பிரகாஷ் என்பவரை டெல்லியில் வைத்து கைது செய்தனர்.

இந்நிலையில் கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் கட்சி எம்எல்ஏவை இந்த கும்பல் இதேபோல ஏமாற்ற முயன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதன் விவரம் வருமாறு: எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருப்பவர் அன்வர் சாதத். இவரது மகள் டெல்லியில் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இவருக்கு வாட்ஸ்அப் வீடியோ கால் வந்தது. அதில் பேசிய ஒரு நபர், தான் சிபிஐ அதிகாரி என்றும், உங்களது மகளை போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்துள்ளோம் என்றும் கூறியுள்ளார்.

வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றால் உடனடியாக தங்களது வங்கிக் கணக்குக்கு ரூ.50 லட்சம் பணம் அனுப்ப வேண்டும் என்று அந்த நபர் கூறினார். அதிர்ச்சியடைந்த அன்வர் சாதத் எம்எல்ஏ உடனடியாக டெல்லியிலுள்ள மகளை தொடர்பு கொண்டார். அப்போது எதிர்முனையில் பேசிய அவரது மகள் தனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று கூறினார். இதையடுத்து எம்எல்ஏ அன்வர் சாதத் எர்ணாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எம்.எல்.ஏ.வை ஏமாற்றி பணம் பறிக்க முயன்ற சம்பவம் கேரளாவில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post சிபிஐ போல் நடித்து காங்.எம்.எல்.ஏ.விடம் ரூ.50 லட்சம் பணம் பறிக்க முயற்சி: கேரளாவில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : CPI ,L. A. ,Kerala ,Thiruvananthapuram ,Kerala Congress ,MLA ,Anwar Sadat ,CBI ,Delhi ,M. L. A. ,
× RELATED சென்னை சிபிஐ அலுவலகத்தில் நிபந்தனை...