×

கோவை ஓட்டல் உரிமையாளர் விவகாரம்; நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வேண்டும்: செல்வப்பெருந்தகை பேச்சு

சென்னை: ஓட்டல் உரிமையாளரை விடுதிக்கு வரவழைத்து மன்னிப்பு கேட்க வைத்தது அராஜகத்தின் உச்சம் என்று செல்வப்பெருந்தகை கூறினார். வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கலந்தாய்வு தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட தலைவரும் சென்னை மாநகராட்சி காங்கிரஸ் குழு தலைவருமான எம்.எஸ்.திரவியம் தலைமை வகித்தார். கவுன்சிலர்கள் தீர்த்தி, சுரேஷ்குமார், சர்க்கிள் தலைவர் ஆர்.கே.நகர் சையத் ஆகியார் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், ‘ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கோவையில் ஜி.எஸ்.டி. தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்ட போது, பாரம்பரியமிக்க அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன் கேட்ட கேள்விக்காக, அவரை அச்சுறுத்துவதும், மிரட்டுவதும் பாஜகவின் பாசிச போக்கையே வெளிப்படுத்துகிறது. நிர்மலா சீதாராமனின் ஆணவப் போக்கிற்கு தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் ஈவிகேஎஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார், துணை தலைவர் சொர்ணா சேதுராமன், கோபண்ணா, கிருஷ்ணமூர்த்தி, விஜய் வசந்த் எம்பி, அசன் மவுலானா எம்எல்ஏ, அமைப்பு செயலாளர் ராம் மோகன், மாநில பொதுச் செயலாளர் சிரஞ்சீவி, முன்னாள் எம்எல்ஏ உ.பலராமன், முன்னாள் மாவட்ட தலைவர் டி.வி.துரைராஜ், குணாநிதி, சர்க்கிள் தலைவர்கள் அரவிந்த் ஆறுமுகம், ஏ.பி.ஆறுமுகம், நஜ்மா ஷெரீப், வீரா ரெட்டி, வால்டாக்ஸ் ரமேஷ், சக்தி நாகேந்திரன், சிவா, எம்.பி.லோகநாதன், ஸ்ரீஸ்வரன், எண்ணூர் குணசீலன், மணலி ரமேஷ், கலையரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செங்கோல் ெகாடுக்க முயன்ற நிர்வாகியால் மோதல்: கலந்தாய்வு கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது, மாவட்ட துணை தலைவர் மதரம்மாகனி என்பவர் திடீரென மாவட்ட தலைமையிடம் அனுமதி பெறாமல் செல்வப்பெருந்தகைக்கு செங்கோல் வழங்க முயன்றார். நிர்வாகிகள் பேசிக் கொண்டிருக்கும் போது கொடுக்க முயன்றதால் நிகழ்ச்சி நடத்தி கொண்டிருந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையே மேடையில் கடும் மோதல் ஏற்பட்டது. மூத்த தலைவர்கள் இருதரப்பை சமாதானப்படுத்தினர். கூட்டம் நடத்தி கொண்டிருக்கும் மாவட்ட தலைமையிடம் தகவல் தெரிவிக்காமல் இப்படி செய்யக் கூடாது என்று கண்டித்தனர். இதையடுத்து அவர் செங்கோல் கொடுக்க மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் அனுமதி அளித்தார். இதையடுத்து மோதல் முடிவுக்கு வந்ததது. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

The post கோவை ஓட்டல் உரிமையாளர் விவகாரம்; நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வேண்டும்: செல்வப்பெருந்தகை பேச்சு appeared first on Dinakaran.

Tags : Govai Hotel ,Nirmala Sitharaman ,Chennai ,Congress Party ,Eastern ,District of North ,Dandiyarpetta ,Goa Hotel ,
× RELATED வீடியோவை பாஜவினர் வெளியிட்ட விவகாரம்...