×

மொபட்-பைக் நேருக்குநேர் மோதி விவசாயிகள் உட்பட 3 பேர் பலி வாலிபர் படுகாயம் திருவண்ணாமலை அருகே நள்ளிரவு விபத்து

திருவண்ணாமலை, செப். 12: திருவண்ணாமலை அருகே நள்ளிரவு மொபட்டும், பைக்கும் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் விவசாயிகள் உட்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் வாலிபர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் களஸ்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்(40). இவரது உறவினர் முருகன்(38), இருவரும் விவசாயிகள். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு திருவண்ணாமலை அருகே உள்ள நூக்காம்பாடி கிராமத்திற்கு சொந்த வேலையாக மொபட்டில் சென்றனர். அங்கு வேலை முடிந்ததும் மீண்டும் தங்களது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர்.

கிளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நாகராஜ் மகன் தர்மராஜ்(20), முருகன் மகன் காளிதாஸ்(19). நண்பர்களான இருவரும் நேற்று முன்தினம் இரவு மங்கலம் பகுதியில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். நள்ளிரவு 12 மணியளவில் திருவண்ணாமலை-அவலூர்பேட்டை சாலை நூக்காம்பாடி அருகே உள்ள செம்மண்குட்டை கிராமம் அருகே வந்தபோது மொபட்டும், பைக்கும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மொபட்டில் வந்த ரமேஷ், முருகன் இருவரும் தூக்கி வீசப்பட்டத்தில் அருகே உள்ள பாலத்தில் மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். தர்மராஜ், காளிதாஸ் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த தர்மராஜ், காளிதாஸ் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தர்மராஜ் பரிதாபமாக இறந்தார். காளிதாஸ் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், விபத்தில் இறந்த விவசாயிகளான ரமேஷ், முருகன் ஆகியோரது சடலங்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் விவசாயிகள் உட்பட 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post மொபட்-பைக் நேருக்குநேர் மோதி விவசாயிகள் உட்பட 3 பேர் பலி வாலிபர் படுகாயம் திருவண்ணாமலை அருகே நள்ளிரவு விபத்து appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalai ,Ramesh ,Kalasthambadi village ,Tiruvannamalai district ,Patugayam ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் இருசக்கர...