×

விசாரிக்கும் போது அடித்ததற்கு வாலிபரிடம் வருத்தம் தெரிவித்த பெண் எஸ்ஐ: வைரலாகும் ஆடியோ


கள்ளக்குறிச்சி: விசாரணையின்போது என்னை ஏன் அடித்தீர்கள் என்று கேட்ட கள்ளக்குறிச்சி பகுதி வாலிபரிடம், பெண் எஸ்ஐ கோபத்தில் அடித்து விட்டேன் எனக்கூறி வருத்தம் தெரிவிக்கும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் பொற்படாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் (34) என்பவருக்கும், அவரது உறவினர் லோகநாதன் என்பவருக்கும் ஏற்கனவே சொத்து பிரச்னை இருந்து வருகிறது. கடந்த வாரம் இருவருக்கும் அடிதடி ஏற்பட்டு கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின்போது விஜயகுமாரை பெண் உதவி ஆய்வாளர் தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நெஞ்சுவலி ஏற்பட்டு அவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே விஜயகுமார், அவரிடம் விசாரணை நடத்திய பெண் உதவி ஆய்வாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு 10 நிமிடம் என்னிடம் விசாரணை நடத்தினீர்கள், அப்போது என்னை எதற்கு அடித்தீர்கள்? இரண்டு தரப்பையும் அழைத்து விசாரிக்க வேண்டுமா… இல்லையா… என்று கேட்டுள்ளார். அதற்கு உதவி பெண் ஆய்வாளர் ‘கோபத்தில் அடித்து விட்டேன்’ என்று வருத்தம் தெரிவிக்கும் வகையில் பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post விசாரிக்கும் போது அடித்ததற்கு வாலிபரிடம் வருத்தம் தெரிவித்த பெண் எஸ்ஐ: வைரலாகும் ஆடியோ appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,SI ,Vijayakumar ,Polpadakurichi ,
× RELATED கள்ளக்குறிச்சி மாவட்டம்...