×

தமிழ்நாடு, கேரளாவில் இயங்கும் முக்கிய ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளை அதிகரிக்க முடிவு: கோட்டம் வாரியாக பட்டியல் தயாரிப்பு

சேலம்: தெற்கு ரயில்வேயில் தமிழ்நாடு, கேரளாவில் இயங்கும் முக்கிய ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளை அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக கோட்டம் வாரியாக பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் முக்கிய வழித்தடங்களில் இயங்கும் பல்வேறு ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கையை கடந்த சில ஆண்டுகளாக ரயில்வே நிர்வாகம் குறைத்தது. இதனால் முன்பதிவில்லா பெட்டிகளில் கூட்ட நெரிசல் அதிகரித்தது. இந்நிலையில் ரயில்வே வாரியம், நாடு முழுவதும் முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக புதிதாக 10,000 முன்பதிவில்லா பெட்டிகளை உற்பத்தி செய்ய இருப்பதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்தார்.

அதற்கான பணியை சென்னை ஐசிஎப் உள்ளிட்ட ரயில் பெட்டி தயாரிப்பு ஆலைகள் மேற்கொண்டுள்ளன. இதன்காரணமாக தெற்கு ரயில்வேயில் தமிழ்நாடு, கேரளாவில் இயங்கும் முக்கிய ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க கோட்டம் வாரியாக பட்டியல் எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை, மதுரை, திருச்சி, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 கோட்டங்களிலும் எந்தெந்த ரயில்களில் கூடுதல் முன்பதிவில்லா பெட்டிகளை எத்தனை எண்ணிக்கையில் இணைக்கலாம் என பட்டியல் தயாரித்து வருகின்றனர். இதற்காக தற்போது எந்தெந்த ரயில்களில் கடும் இடநெருக்கடியோடு முன்பதிவில்லா பெட்டிகளில் பயணிகள் செல்கின்றனர் என்பதை ஆய்வு செய்கின்றனர். குறிப்பாக கேரளாவில் உள்ள திருவனந்தபுரம், எர்ணாகுளம் பகுதியில் இருந்து சென்னைக்கு வரும் ரயில்கள், கோவை-சென்னை ரயில்கள், சென்னை-நாகர்கோவில் ரயில்கள், பெங்களூரு-நாகர்கோவில், கோவை-நாகர்கோவில் ரயில்களில் கூடுதல் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன.

அதேபோல், கேரளா, தமிழ்நாட்டில் இருந்து உ.பி., ம.பி., ராஜஸ்தான், ஜார்க்கண்ட், பீகார், மேற்குவங்கம், சட்டீஸ்கர், மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு செல்லும் 30க்கும் அதிகமான ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கையை 5 அல்லது 6 ஆக அதிகரிக்க முடிவு செய்துள்ளனர். அதற்கான பட்டியலையும் ரயில்வே அதிகாரிகள் தயாரித்து வருகின்றனர். இதுபற்றி ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘‘தெற்கு ரயில்வே பகுதியில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களிலும், சென்னைக்கு வரும் ரயில்களிலும் முன்பதிவில்லா பெட்டிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளது. நடப்பாண்டில் புதிதாக 2,500 முன்பதிவில்லா பெட்டிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர ரயில்வே திட்டமிட்டுள்ளது. அதில், அதிகளவு பெட்டிகள் தெற்கு ரயில்வேக்கு கிடைக்கும்’’ என்றனர்.

The post தமிழ்நாடு, கேரளாவில் இயங்கும் முக்கிய ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளை அதிகரிக்க முடிவு: கோட்டம் வாரியாக பட்டியல் தயாரிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Kerala ,Salem ,Railway Administration ,Southern Railway ,Tamil Nadu, Kerala ,Dinakaran ,
× RELATED செப்டம்பர் 12-ம் தேதி காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம்