×

சுருட்டப்பள்ளி, வடதில்லையில் சிவன் கோயில்களில் பிரதோஷ விழா


ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே சுருட்டப்பள்ளி, வடதில்லை ஆகிய இடங்களில் உள்ள சிவன் கோயில்களில் நேற்று மாலை பிரதோஷ விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். அனைத்து பக்தர்களுக்கும் அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டன.ஊத்துக்கோட்டை அருகே சுருட்டபள்ளி கிராமத்தில் பிரசித்தி பெற்ற  பள்ளிகொண்டீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. அனைத்து சிவன் கோயில்களிலும் லிங்க வடிவில் காட்சி தரும் சிவபெருமான், இங்கு மனித வடிவில் பள்ளி கொண்ட நிலையில் இருப்பது விசேஷமாக கருதப்படுகிறது.

இந்நிலையில், ஆடி மாத தேய்பிறை பிரதோஷ தினத்தை முன்னிட்டு நேற்று காலை விநாயகர், வால்மீகீஸ்வரர், மரகதாம்பிகா சமேதராக தட்சிணாமூர்த்தி, வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான், பள்ளி கொண்டீஸ்வரர் மற்றும் சர்வமங்களாதேவி ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.  பள்ளி கொண்டீஸ்வரருக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது,இதைத் தொடர்ந்து நேற்று மாலை பிரதோஷத்தை முன்னிட்டு வால்மீகீஸ்வரர் சன்னதி எதிரே உள்ள நந்திக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர் உள்பட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

பின்னர் அருகம்புல், வில்வ இலை மற்றும் மலர்களால் நந்தி அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் உற்சவரான சிவன்-பார்வதி கோயிலை வலம் வந்தனர். இப்பூஜைகளை தலைமை குருக்கள் கார்த்திகேசன் சிவாச்சாரியார் சிறப்பாக நடத்தி வைத்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் வடதில்லை பாபஹரேஸ்வரர், காரணியில் உள்ள காரணீஸ்வரர், பெரியபாளையம் நம்பாலீஸ்வரர், ஐமுக்தீஸ்வரர் ஆகிய சிவன் கோயில்களில் நேற்று மாலை பிரதோஷ தினத்தை முன்னிட்டு நந்திக்கு பால் தயிர், பன்னீர் உள்பட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களால் நந்தியை அலங்காரம் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்று தரிசித்தனர்.

The post சுருட்டப்பள்ளி, வடதில்லையில் சிவன் கோயில்களில் பிரதோஷ விழா appeared first on Dinakaran.

Tags : Pradosha ceremony ,Shiva ,Suruttapally, Vadathillai ,Oothukottai ,Shiva temples ,Suruttapally ,Vadathillai ,Sami ,Suruttapalli, ,
× RELATED சிவனை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா?